"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Friday, December 25, 2009

குடியாட்சி

மக்களாட்சியில் மக்கள் மனதில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளதா?
மகிழ்ச்சி என்பதே உழைக்காமல் வரும் ஊதியத்தின் ஊதியமோ?
மக்களின் மனம் இப்படித் தான் சிந்திக்கிறது!
மக்கள் என்பவர் யாவர்? மக்களாகிய நாம் தானே!
ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்! ஆதிக்கத்தை விரட்டினோமா?
ஆங்கில மோகம் கொண்டோம்! அந்நிய தேசம் கண்டோம்!
ஆத்மார்த்த அன்பினை இழந்து ஆங்காங்கு அகதிகள் ஆகிப்போனோம்!
அந்நிய தேசத்தில் அகதி என்றால் கூட பரவாயில்லை!
நம்முடை தேசத்திலேயே பலர் நலனிழந்து நிற்கின்றனரே!
சுதந்திரம் பெற்றுவிட்டோம்! குடியுரிமை கையில் கொண்டோம்!
எதனை பெற்றோம் நாம்? எதனைத் தொலைத்தோம் நாம்?
சுதந்திர வாழ்க்கையைப் பெறவில்லை நாம்!
சுயநல வாழ்க்கையைப் பெற்றோம்! பொதுநலப் பார்வையைத் தொலைத்தோம்!
தொலைநோக்குப் பார்வையுமில்லை; அகநோக்குப் பார்வையுமில்லை;
தொலைக்காட்சி நுட்பங்கள் உலகை இணைத்தது உண்மை தான்!
உள்ளங்களை இணைத்ததா அவை!
உலகின் குடைக்கீழ் வாழும் ஓர் உயிர் நாம்!
உணர்வோமா நாம் இதை!
உணர்ந்தே அமைப்போமா புதிய பாதை!
கொடைவள்ளல் பரம்பரை நாம்; கொடுத்துவிட்டோம் அகிம்சைதனை!
விடையென்ன அறியுமுன்னரே வினாவினையே அழித்துவிட்டோம்!
கடையென்ன , முதலென்ன கண்ணியம் காப்பதற்கு…
விடைபெறு சுயநலமே எம் நாட்டை விட்டு நீங்குதற்கு!
தடையேது உந்தனக்கு எம் தாயை விட்டு ஓடுதற்கு!
மடைதிறந்த வெள்ளம் போல் மக்களாட்சி மலரட்டும்!
படைகொண்டு புதுமை பாரதத்தை சமைக்கட்டும்!
மாசற்ற இந்தியா மலரட்டும்!
நீரிலே, நிலத்திலே,காற்றிலே,…
மாசற்ற இந்தியா மலரட்டும்!
மனங்களிலும் புதுப்பொலிவு பிறக்கட்டும்!
வானுயர கேள்விகள் ஆச்சரியமாகட்டும்!
கேண்மையுணர்வே அதில் ஓங்கட்டும்!

தமிழ்த்தாய் வாழ்த்து!

அன்னையே! அருந்தமிழே! அகமிருந்து காருமம்மா!
அறிவின் சுடரேற்றி ஆத்மபலம் தாருமம்மா!
இம்மையிலும் மறுமையிலும் இனிதிருக்கும் நற்றமிழே!
ஈடுஇணை இல்லாமல் ஈட்டுபுகழ் கொண்டவளே!
உள்ளத்துள் ஒளிர்ந்திடுவாய்! உலகமெங்கும் நிறைந்திடுவாய்!
ஊக்கம் கொடுத்தேயெம்மை ஊரறிய செய்திடுவாய்!
எழுகடல் ஆழம் உனது! எல்லியின் தன்மை உனது!
ஏற்றம் தருந்தமிழே! வையம் ஏற்றதோர் பொன்மொழியே!
ஐயம் திரிபறக் கற்றிடவே ஐக்கியமானோம் உன்மடியில்!
ஒன்றிடச் செய்திடுவாய்! ஒல்காப் புகழ்ச் சேர்த்திடுவாய்!
ஓதும் மறை நீயெனக்கு! ஓங்கு புகழ் நாவினிற்கு!
ஒளடதமாய் நீயிருக்க அகம் குளிரும்! ஒளவை தந்த நூலெலாம் அறம் வளர்க்கும்!
அன்பும் அமைதியுமென் தன்மை! அறிவும் செறிவும் நம்முடைமை!
சொன்ன சொற்கள் எனக்குத் தலைமை கொள்ளும்!
சொல்லாத சொற்களுக்கு நாம் தலைமை கொள்வோம்!
செந்தமிழாய்,நறுந்தேனாய் செழித்திருக்கும் செழுந்தமிழே!
செந்நாவில் வீற்றிருந்து எந்நாளும் வாழிய நீ!
வந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்று
பைந்தமிழே! எந்நாளும் பாங்குடன் நீ வாழியவே!

Thursday, December 24, 2009

புதிய தமிழ்த்தாய் வாழ்த்து

பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நன்றி, முனைவர். மு. இளங்கோவன் அவர்களே!
பதிவர் சங்கமத்தில் வாசித்த தமிழ் வணக்கம்!

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!

சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில்

நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!



ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் – சந்தித்ததும் சிந்தித்ததும்!

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் கடந்த 20.12.2009 அன்று ஈரோடு B A I – HALL ல் சிறப்பாக நடந்தேறியது. ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் உலக வலைப்பதிவர்கள் வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளனர்.

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான எதையும் செய்வதில்லை. செய்வதை வித்தியாசமாக செய்கின்றனர். அங்ஙனமே ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழுமமும் தமது செயலை மிக நேர்த்தியாக செய்து சாதனை செய்துள்ளனர்.

இப்பதிவர்கள் சங்கமத்தில் முருக.கவியாகிய என்னையும் அழைக்கச் சொன்னவர் திரு.நா.கணேசன் ஐயா அவர்கள். அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

வரவேற்பும் தலைமையேற்பும்
ஈரோடு கதிர் அவர்கள் அனைவரையும் வரவேற்று நண்பர் ஆரூரன் அவர்களைத் தலைமையேற்று இவ்விழாவை நடத்தித் தருமாறு முன்மொழிய, அவரும் தலைமையேற்று முதல் நிகழ்ச்சியாகத் தமிழ் வணக்கம் வாசிக்க என்னைப் பணித்தார். இத்தமிழ் வணக்கப் பாடலை தேர்வு செய்ததும் ஆரூரன் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தாய் வணக்கம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தினை வாசிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். தமிழார்வம் மிக உள்ள நமக்கெல்லாம் அப்பாடல் புதிதானதே. ஆழமாகத் தமிழ்த்தாயை அழகுற வருணித்து வாழ்த்துகின்ற பாடலது! இதனால் விழாத் துவக்கமே சிறப்பான கண்ணோட்டம் பெற்றது!
தமிழன்னையின் வணக்கத்தை வாசிக்க வாய்ப்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருஞ்சித்திரனாரின் கவியைத் தொடர்ந்து நான் தமிழன்னைக்குப் படைத்த பாவினையும் வாசிக்கும் எண்ணத்துடன் தான் வந்தேன். ஆயினும் வெகு நேரம் வந்தவர்களை [புலவர் போன்றோரை] நிற்க வைக்கக் கூடாது என்பதை சிந்தையில் கொண்டு அதனை நானே தவிர்த்துவிட்டேன். அப்பாடலை என் வலைப்பூவில் பார்க்கலாம்.

தலைமையுரை
தமிழ்த்தாயின் வணக்கத்தினைத் தொடர்ந்து, ஆரூரன் அவர்கள் தன் தலைமையுரையினை வழங்கினார். அதில் மொழி வழக்கு குறித்து சுவைபடப் பேசினார். கலிங்கராயன் என்பது காளிங்கராயன் ஆனதும் பின்பு காளிங்கரையான் ஆனதும், கம்பநாடன் கம்பநாடார் ஆகிப் போனதும் குறிப்பிட்டார். இவ்வாறு மொழி பலவகையான மாற்றங்களைப் பெறுவதை நாம் அறிந்த வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றார். பெரும்பாலும் மொழி அமைப்பு சிதையாமல் காக்க வேண்டும்.

பதிவர்கள் அறிமுகம்
அடுத்ததாக விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்களையும் தங்களது வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். கோபியில் இருந்து வந்த லதானந்த் என்ற பதிவர் கூறியதாவது : இத்தகைய பதிவர்கள் கூட்டம் ஆங்காங்கு நடத்தப்பட்டு இருக்கின்றன. நானே கூட ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறேன், ஆனால் 10 அல்லது 15 நபர்கள் தான் வந்திருந்தனர். இன்றைய கூட்டத்தைக் காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆம் அவர் கூற்று சரியானதே! ஈரோட்டில் நடந்த இப்பதிவர் சந்திப்பில் 60 க்கும் மேற்ப்பட்ட பதிவர்களும் மற்றும் வாசகர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினராக புலவர். இராசு ஐயா அவர்களும், தமிழ்மணம் காசி அவர்களும், சிவக்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் தங்கள் கருத்துகளை சிறப்பாகப் பதிவு செய்தனர்.
மூத்த பதிவர்கள் வரிசையில் சில பதிவர்கள் தங்களின் அனுபவ அறிவினை விழா மேடையில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். விழாக் குழுவினர் பயனுள்ள தலைப்பினைத் தேர்வு செய்து தகுந்த நபர்களிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒருங்கு கூடி தமிழ் வளர்க்கக் காட்டுகின்ற ஆர்வத்தை நோக்கினால் தமிழ்நாட்டில் உள்ள நம்மவர்களுக்கு ஆர்வம் இன்னும் அதிகம் தேவை என்றே தோன்றுகிறது.

பதிவர்களின் கருத்துகள்
பதிவர் வசந்தகுமார், சிறுகதை எழுதுவது குறித்த கருத்துகளை வெளியிட்டார். வெண்பா இலக்கணம் பயின்றால் மிகச் சுலபமாக சிறுகதை எழுதமுடியும் என்றும் தாம் எழுதிய சில வெண்பாக்களை வாசித்துக் காண்பித்தார். வாழ்த்துகள்!

பதிவர் பழமைபேசி, நல்ல சமுதாய அக்கறை கொண்டு கருத்துகளை வழங்கினார். தமிழன் என்ற உணர்வும் மனிதன் என்ற அபிமானமும் நம்மிடம் நிறைய வேண்டும். உள்ளன்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழவேண்டும் என்றும் அத்தகைய கட்டமைப்பு நம் சமுதாயத்தினரிடம் மேலும் வளர்க்க வேண்டியதாய் உள்ளது என்றும் மிக அழகான கருத்தைப் பதிவு செய்தார். வட்டார மொழி வழக்கில் எழுதுவதும் ஒரு வரலாறாகப் பதியும் என அறிவுறித்தினார். வாழ்த்துகள் பழமைபேசி அவர்களே!

பதிவர் வலைச்சரம் சீனா அவர்கள், எதிர்பார்ப்பு என்னும் தலைப்பில் பேசினார். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் எதிர்பார்ப்பினை மிக அழகாக பட்டியலிட்டார். கலகலப்பாக மிக நேர்த்தியாகப் பேசினார். இவ்வுரை பயனுள்ளதாக அமைந்தது.

பதிவர் சுமஜ்லா, வலைப்பூக்களின் தொழில்நுட்பத்தைப் பற்றி விளக்கினார். அடேங்கப்பா! இவருடைய வலைப்பூவைப் பார்த்து வியந்து போனேன். தன் எண்ணங்களை அழகாகப் பதிகின்றார். நல்ல வளமையான எதிர்காலம் உங்களால் மொழிக்கும் மொழியறிவால் உங்கட்கும் உள்ளது என்பது திண்ணம் சகோதரி! வாழ்த்துகள். சக பதிவர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.

பதிவர் துபாய் செந்தில்வேலன், சமுதாய அக்கறையோடு பேசினார். புள்ளி விபரங்களோடு துல்லியமாக பேசி அசத்தினார். கோடிக்கணக்கில் உள்ள தமிழர்கள் குறைவாகவே வலைப்பூக்கள் வைத்திருப்பதை குறிப்பிட்டார்.
நல்ல எண்ணங்களை பதிவுகளில் பதிந்து இன்னும் பல கட்டுரைகளை வழங்குங்கள் அன்பர்களே. மேலும் எழுதுவதில் உள்ள சிக்கல்களையும் விழிப்புணர்வோடு எழுதவேண்டிய முறைமையையும் எடுத்துக்கூறிய செந்தில்வேலன் அவர்களுக்கு பாராட்டுகள்.

பதிவர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமாக்களைப் பற்றிப் பேசினார். தமிழ் சினிமாக்கள் இன்னும் வளரவேண்டும் என்றும் உலகத் தரத்தில் அவை உயரவேண்டும் என்றும் கூறினார். வாழ்த்துகள்.

சகோதரி ரம்யா, பெண் வலைஞர்களின் எண்ணிக்கையும் வருகையும் குறைவாக உள்ளதைச் சுட்டிக் காட்டினார். பெண்களின் வருகை அதிகமாய் இருக்க வேண்டும், இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். வந்திருந்த நபர்களில் மொத்தம் ஆறே பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மூவர் வாசகர்கள், மூவர் பதிவர்கள்.
எல்லோருடைய கருத்துப் பகிர்தலை ஆழமாக நோக்கிய சகோதரி ரம்யா மிகவும் நெகிந்து போனார். வாழ்த்துகள்.

பதிவர் அகநாழிகை, வலைப்பூக்களில் செய்த பதிவுகளை புத்தகமாக வெளியிடுவது குறித்து பேசினார். தாம் வெளியிட்ட மற்றும் பதிப்பித்த நூல்களைப் பார்வைக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிவர் வால்பையன் தன்னுடைய பெயருக்கேற்றவாறு கலகலப்பூட்டினார். மற்ற பதிவர்களும் தங்களுடைய கருத்துகளை மிக அழகாகச் சொன்னார்கள்.

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் எண்ணற்ற மூத்த பதிவர்களை அழைத்து அவர்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் வழங்கி நிகழ்ச்சிகளை சீரிய முறையில் வழி நடத்திச் சென்றது சிறப்புக்குரியது.

சிறப்பு அழைப்பாளர்களின் உரை
சிறப்பு விருந்தினராக தமிழ்ப் புலவர் முனைவர். இராசு ஐயா அவர்களை அழைத்தது தமிழ்த்தாயிற்கு செய்த சிறப்பென்றே சொல்லவேண்டும். பல பழமையான செய்திகளை மிக அருமையாக எடுத்துச் சொன்னார். வலைப்பதிவில் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதினால் ஏடுகளின் பணி குறையுமென்றும் இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்றும் தாள்கள் தயாரிப்பதனால் ஏற்படும் மாசு குறையும், வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் மாசு குறையும் என்றும் குறிப்பிட்டார். உலக அளவில் தமிழ் மொழியை வளர்க்க நாம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டுதலுக்குரியது என்றும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் என குறிப்பிட்டார்.

தமிழ்மணம் காசி அவர்கள் பேசும்போது தமிழ் வலைப்பதிவர்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள், வலைப்பதிவு குறித்த அறிவு பொது மக்களிடம் பரவலாகி வருகிறது, இன்னும் பல பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்னும் பல நல்ல கருத்துகளைச் சொன்னார்.

தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி
தமிழ்மணம் திரட்டி தன்னுடைய முகப்பில் ஈரோடு தமிழ்ப்பதிவர்கள் சங்கமம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது. சங்கமத்தின் முழு காணொளியை சங்கமம் லைவ் இணையதளம் வெளியிடும் என்பதை அறிந்தோம். இவ்விழாவில் தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி திரட்டிகள் பங்குகொண்டன.

இடுகைகள் இடுவதிலும் பின்னோட்டம் வழங்குவதிலும் உள்ள நிறைகுறைகளை பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள்சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர், ஆகியோர் தலைமையில் கலந்துரையாடினர். சுவையான விவாதங்கள், அத்துமீறல்கள் இன்றி அத்தனையும் அருமையாக நடத்தப்பட்டன.

குழுமம் துவக்கி வைத்தல்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம், குழுமத்தினரால் துவக்கி வைக்கப்பட்டது.

நன்றியுரை மற்றும் இலவச நூல் வழங்கல்
இறுதியாக, நண்பர் கதிர் அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் தேநீர் விருந்தும் சிற்றுண்டியும் வழங்கி நம் தமிழ்ப் பண்பாட்டின் உயர்வாய் அமைந்த விருந்தோம்பல் நிறைவாய் இருந்தது. மேலும் அனைவருக்கும் புலவர் இராசு ஐயா எழுதிய ‘ஈரோடு மாவட்ட வரலாறு’ எனும் நூல் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக இலவசமாக வழங்கப் பட்டது.
எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, வந்திருந்த அனைவரையும் பேசவைத்து கருத்துகளைக் கேட்டு விளக்கி விரைவாக நிறைவாக இவ்விழாவை முடித்தபெருமை நம் ஈரோடு தமிழ் வலைப்பதிவு குழுமத்தையே சாரும் என்றால் அது மிகையாகாது.

தமிழ் ஆர்வலர்களின் ஆசி
ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழுமத்தின் இடையறாத உழைப்பு மட்டுமின்றி உலகமெங்கும் வியாபித்துள்ள நம் தமிழ் ஆர்வலர்கள் பலரின் [திரு. நா. கணேசன், சிங்கப்பூர் பிரபாகர் மற்றும் பலர்] விருப்பமும் ஆசிகளும் விழா வெற்றி பெற பெரிதும் உறுதுணையாய் அமைந்தன என்பதை நாம் அன்புடன் உணர்கிறோம்.
தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் மாநாட்டில் நம் பதிவர்கள் குழுமம் ஏதேனும் பயனுள்ளதாய் செய்ய வேண்டுமென ஒரு அன்பர் தெரிவித்தார். அக்கூற்று வரவேற்கத்தக்கதே! அது குறித்தும் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்து இக்குழு வெற்றி பெற நல் வாழ்த்துகளோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.

அனுபவமிக்க பதிவர்களின் கருத்துகளாலும், கலந்துரையாடலாலும், வாசகர்களும் எம் போன்ற இளைய பதிவர்களும் நிறைய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுவான நிகழ்ச்சி ஒன்று நடந்தேறினால் அதனைக் குறித்து ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வரத்தானே செய்யும். வந்தவை அனைத்தும் பல பல வண்ணங்களில் நிகழ்ச்சியைப் பாராட்டியும் பட்டைதீட்டியும் வைரமெனவே ஆக்கி விட்டன! வாழ்த்துகள்!!



Saturday, December 19, 2009

அறத்தால் வருவதே இன்பம்

குறிப்பு:குருகுலத் தென்றல் எனும் மாத இதழ் சார்பாய் நடத்தப்பட்ட 11-வது அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது படைப்பு.

ன்னையின் அறம் அன்பு செய்வது!
சானின் அறம் அறிவு புகட்டுவது!
ல்லறத்தான் அறம் விருந்து ஓம்புவது!
வோனது அறம் ஈகையை வளர்ப்பது!

ற்றாரின் அறம் உண்மையாய் இருப்பது!
ராரின் அறம் ஊக்கம் கொடுப்பது!
ல்லோரின் அறம் எளிமையாய் வாழ்வது!
ற்றதோர் அறம் ஏந்திழையை மதிப்பது!

யன்மீர்! உம் அறம் ஐயமற கற்பது!
வ்வொருவரின் அறம் ஒற்றுமையாய் இருப்பது!
தும் மறையோர் அறம் ஓதுவதை உணர்வது!
ஒளவை தந்த அறம் அறநூல்கள் விளக்குவது!


பிள்ளையாய் இருந்தால் பெற்றோரையும் பெரியோரையும்
மதித்து நடப்பதே அறம்!
வளர்ந்தநிலைப் பிள்ளையென்றால் நூல்களைக் கற்பதும்
அதன்வழி நடப்பதும் அறம்!

அடுத்தநிலை யென்றால் அறமும்புகழும் பேணித்
தொழில் செய்வதுவே அறம்!
தொடுத்த தொழிலில் பொருளீட்டலும் பிறர்க்கு
ஈந்து மகிழ்வதும் அறம்!
இல்லறம் பேணுவதும் நல்லறம் பேணுவதும்
சொல்லறம் பேணுவதும் அறம்!
வல்லமை கொண்டே வாய்மையைக் காப்பதும்
நேர்மையை ஏற்பதும் அறம்!

அறவழி நின்று நேர்வழி சென்று
திரட்டிய செல்வ மதை
அகமது குளிர்ந்து முகமது மலர
ஜகமெங்கும் கொடுப்பது அறம்!
உள்ளம், சொல், செயல் இம்மூன்றும்
ஒருநேர்கோட்டில் உடையது அறம்!
உலக உயிரனைத்தும் தான் உணரும்
கடமை என்பது அறம்!

நிறைவாய் உயர்ந்த செல்வரும், சான்றோரும்,
தானதருமம் செய்வது அறம்!
உயர்வாய் உலகில் வாழும் பெண்டிர்
தாங்கொண்ட கற்பு அறம்!
துறந்தவர் துறவி என்பார் எல்லோரையும்
இறையென மதிப்பது அறம்!
அறமதை அகத்துள் நிறுத்தி நிதம்பேணுவோர்
பெறுவர் நற்பேறெனும் அறம்!

அறநூல்கள் பதினொன்றும் எடுத் துரைப்பதும்
விரித் துரைப்பதும் அறம்!
அறத்துள் நாயகமாய் எல்லாச் செயல்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பதும் அறம்!

அறமது செய்ய வயதொன்று மில்லை!
அறத்தினைச் செய்ய அகன்றிடுமே தொல்லை!
முழுமனதுடன் செய்யும் நல்லறத்தினால்
முழுப்பயனையும் நாம் நிதம் வெல்லலாம்!

அறத்தின் வழியே கிடைப்பதே இன்பமாம்!
மற்றதெல்லாம் இன்பம் தருவதாய்த் தோன்றலாம்!
பிறசெய்கையால் விளையும் இன்பம் முடிவினில்
துன்பந் தனையே தந்து செல்லும்!
செய்ய வேண்டிய செயல்களுள் ஒன்றாய்
உய்யும் வழியென உறுவதும் அறமே!
அறமே நிறைவாய் இன்பம் தருமே!
அறமே பிறவியைக் கடக்க உதவுமே!
அறமே சிறப்பும் செல்வமும் தருமே!
நன்மை யாவும் விளைவது அறத்தால்!
தீமை யாவும் முறிவது அறத்தால்!

அழிவே இல்லா ஆனந்தம் தருமே!
அறவோர் புகழும் ஆன்ற நல்லறமே!
கண்ணும் கருத்தும் கடமையில் நிறைவாய்
இருந்தால் விளைவது இன்பம்!
எண்ணும் எண்ணம் யாவும் சுத்தமாய்
இருந்தால் விளைவது இன்பம்!
சொல்லும் சொல்லில் தூய்மை சிறப்பாய்
இருந்தால் விளைவது இன்பம்!

வெல்லும் வகையை அறிந்தே யாமிங்கு
வென்றால் வருமே இன்பம்!
உள்ளும் புறமும் அகமே மேவி
உண்மை யிருந்தால் இன்பம்!
துள்ளும் மனமும் குணமும் தூய்மை
துலங்கிட வருமே இன்பம்!
ஒல்லும் வகையான் அறிந்தே யாமிங்கு
அறம்செய்தால் வரும் இன்பம்!

பல்லக்கில் செல்ல பண்புடன் நாம்
அறம்செய்வதால் வரும் இன்பம்!
தொல்லைகள் அகல வல்வினை விலக
துலங்கிடுமே நம்முள் இன்பம்!
செல்லும் வழியில் அறம் செய்வதினால்
செல்வமும் சிறப்பும் சேரும்!
உள்ளபடி இன்பம் தருவது அறமே
உணர்ந்தால் நன்மை பெருகும்!

கள்ளமில்லாமல் கடமையைச் செய்தால்
கனிவுடன் துணிவும் பெருகும்!
பிறவிப் பெருங்கடல் கடந்திடவே நமக்கு
உதவிடுமே நல் அறமே!
துறவியும் இங்கே சிறப்பு பெறுவது
அறத்தை துறக்காததனால் தானே!
அறவழி நின்று செல்வம் சேர்த்து
சிறப்பினைப் பெறுவோம் நாமே!
சிறப்பினைப் பெற்று ஈகையைச் செய்து
மேலும் சிறப்போம் நாமே!!

Thursday, December 17, 2009

வாருங்கள் பதிவர்களே…….

தங்கள் எண்ணங்களை பதிவுகளில் பதியமிட்ட
பதிவர்களே! நம் நட்பெனும் வாசம் வீச
சந்திப்பு மலரட்டும்!!

Sunday, December 13, 2009

இல-5 குறளில் மேலாண்மை

சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய “மணற்கேணி – 2009” கருத்தாய்வுப் போட்டிக்கு, இலக்கியப் பிரிவில் ‘குறளில் மேலாண்மை’ எனும் தலைப்பில் அனுப்பிய கட்டுரை.

திருக்குறளில் பெருவாரியாகக் கூறப்பட்டுள்ள அசைக்க முடியாத சத்தியங்களைத்தான் குறளில் மேலாண்மை என்ற தலைப்பு சுட்டுகிறது. திருக்குறள் தனி மனிதனுக்குத் தேவையான கருத்துக்களை மட்டுமல்லாமல் நல்லதொரு சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களையும் கூறுகிறது.

மனிதர்கள் பலர் இணைகையில்தான் சமுதாயம் தோன்றுகிறது. எனவே காலம் கடந்து இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து என்றென்றும் நிலையான தத்துவங்களைக் கூறுகின்ற உலகப் பொதுமறையாய் இன்றும் நின்று நிலவுகின்றது.

இன்றளவும் இதற்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்புகள் பல. குறுகிய வடிவம், பரந்து விரிந்துள்ள பொருள் அமைப்பு. இது படிக்குந்தோறும் புதுப்புது பொருளுணர்வு பெறக்கூடிய ஆழ்ந்த கருத்துகள் பொதிந்தது.
திருக்குறள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றது. இதில் ஒரு மனிதன் பிறந்தது முதல் மறைகின்ற வரை பின்பற்ற வேண்டிய கருத்துகளை வரிசையாகக் காண முடிகிறது.

ஒரு மனிதன் பெற்ற செல்வங்களுள் சிறந்தது நல்ல அறிவினைப் பெற்ற மக்களைப் பெறுவதே என்கிறார் வள்ளுவர். நன்மக்கள் எவ்வாறு அமைவர்? என்றால் வள்ளுவர் அவரவர் வினையால் வரும் என்கிறார். நாம் நல்லது செய்தால்தான் நமக்கு நலன் விளையும் செயல்களைச் செய்ய நல்ல பிள்ளைகள் தோன்றுவர். இன்றைய இளைய சமுதாயம் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

தன்னுடைய இளமைக் காலத்தில் தன்னிச்சை படியெல்லாம் நடப்பவர்கள் பிற்காலத்தில் தன்னிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொதுநல நோக்கு, தொலைநோக்குப் பார்வை இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை. இவற்றை ஒவ்வொரு மனிதனும் கொண்டிருக்க வேண்டும். கடமையை உணர்ந்து போற்றும் நல்ல குணம் உடையவர்கள் நல்லவை அனைத்தையுமே தங்களுக்குக் கடமை என்று கொள்வார்கள். இதனையே வள்ளுவர்
“கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவற்கு”
எனும் குறளில் எடுத்துக் கூறியுள்ளார்.

இன்றைய தேவை என்னவென்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
எனும் குறள் சொல்வதைப் போல கேடு வரும் முன்னரே உலகைக் காத்துக் கொள்ள வேண்டும்.

உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அதன் போக்கினை மாற்றி அழிவினைத் தடுக்கவேண்டும். இவ்வழிவிற்கு என்ன காரணம்? ஆராய்ந்துப் பார்த்தால் எந்த ஒரு பொருளையும் நாம் ஆக்கத்திற்கு நல்வழியில் பயன் படுத்த வேண்டும். அழிவிற்குப் பயன் படுத்தக் கூடாது. சிலர் மாறாகப் பயன் படுத்துவது தான் காரணம். விஞ்ஞானத்தின் விளைவால் இச்சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும் தொழில் நுட்பச் சாதனங்களை நாம் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

தீக்குச்சியைக் கொண்டு விளக்கும் ஏற்றலாம், வீட்டையும் கொளுத்தலாம். விளக்கு ஏற்றுவதனால் ஒளி தோன்றி பயன் விளையும், வீட்டைக் கொளுத்துவதனால் என்ன பயன் விளையும்? சிந்தித்துப்பார்க்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
எனும் உண்மைக்கு ஏற்ப தெளிந்த அறிவுடன் செயலாற்றிட வேண்டும்.


சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கம் அவசியம்.
”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
ஒரு மனிதனை மேன்மைப் படுத்துவது ஒழுக்கமே ஆகும். எனவே அது உயிரினும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. தவறு ஏற்பட என்ன காரணம்? போதிய அறிவு இல்லாமையே ஆகும்.

இந்த அறியாமையைப் போக்கவே கல்வி கற்க வேண்டும்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக.
கற்பதற்கேற்ற நூல்களைத் தேர்ந்தெடுத்து குற்றம் இல்லாமல் கற்க வேண்டும். கற்ற நூல்களில் அறிந்து கொண்டவற்றிற்குத் தக்கவாறு வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

இன்றைக்கு நமது அரசாங்கம் கல்வியை வழங்க பல வழிகளில் முயன்று வருகிறது. அதனைப் பயன்படுத்தி இந்நாட்டில் உள்ளோர் அனைவரும் கல்விக் கண் திறந்து கொள்ள வேண்டும். கல்வியறிவு பெற்ற சான்றோர்களும் மெய்யுணர்வு பெற வேண்டும். சமுதாயத்தை நோக்கின் படித்தவர்கள் யாவரும் பொதுநல நோக்கோடு இருப்பதாகத் தெரியவில்லை. படிக்காதவன், பாமரன் கூட கருணையோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையோடு இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் படித்தவர்கள் பெரும்பாலும் பண்பினை இழந்தவர்களாகவும், பொறுப்பு அற்றவர்களாகவும், சுயநலவாதிகளாகவுமே இருக்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும். ஒருவர் அரத்தைப் போன்ற கூர்மையான அறிவுடையவராய் இருந்தாலும், அவரிடம் மனிதப் பண்பு இல்லை என்றால் அவர் மரத்திற்குச் சமமானவரே ஆவர் என்பதை
“அறம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்”
எனும் குறட்பா விளக்குகிறது. பசுமையான மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்துகின்றனர் பண்பில்லாத மரம் போன்ற மானிடர்கள்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்”
எனும் குறள் உழவர்களே சிறந்தவர்கள் என்று கூறுகிறது. உழவு செய்து அதன் பயனால் கிடைப்பதை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர் ஆவர். மற்ற தொழில் செய்பவர்கள் அனைவரும் பிறரைத் தொழுதுண்டு அவர் பின் செல்பவர்களே ஆவர்.

இத்தகைய பெருமைக்குரிய உழவர்கள் இன்றைக்கு இலாப நோக்கோடு பலவித வேளாண் உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்பதற்கு ஏற்ப அறிவியல் யுகத்தில் பலவித உரங்களைப் பயன்படுத்துகின்றனர். விளைவு, விளைச்சல் அதிகம்; ஆனால், அந்த உணவிலிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய உயிர்ச் சத்துக்கள் தாம் மிகவும் குறைவு. நல்ல ஆரோக்கியமான மனிதனை இன்று காணுதல் அரிது. உணவு உற்பத்தியோ பொருள் வளமோ நம்மிடம் இல்லாமல் இல்லை. ஒருவன் தேவைக்கேற்ற உணவின்றி தவிக்கிறான். ஒருவன் உண்பதையே வேலையாய்க் கொண்டிருக்கிறான். இந்நிலை மாறவேண்டும். மீதுண்பதாலும் நோய் ஏற்படும். போதிய உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நோய் ஏற்படும். இதனையே வள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ எனும் குறளில் விளக்குகிறார். நோய்களின்றி வாழ்வதற்கும் வள்ளுவர் வழி சொல்கின்றார்..

ஒவ்வாத உணவை ஒதுக்கி, அளவுக்கு அதிகமாய் விரும்பாமல் வாழ்கின்றவனுடைய உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய்கள் உண்டாகா – இக்கருத்தினை
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
எனும் குறள் கூறுகிறது. இந்த ஒவ்வாத உணவு என்பது இன்றைய மக்கள் விரும்பும் விரைவு உணவு வகைகளைக் கூறலாம். இவற்றை எல்லாம் நீக்கி விட்டு நம் நாட்டில் விளையக் கூடிய கீரைகளையும், பழங்களையும் உண்ணும் பழக்கம் அமைதல் வேண்டும்.
கூட்டுக் குடும்பங்கள் பல சிதைந்ததற்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சுயநலமே காரணம். பாசத்தைவிட பணமே பெரிதெனக் கொள்ளும் பாங்கல்லவா இந்நிலைக்குக் காரணம். தன்னுடைய வருமானத்தைத் தானே பயன் படுத்த எண்ணுவதனாலும், தன் உறவினர்க்குச் செலவு செய்வதைக்கூட விரும்பாததாலும் விளைந்ததுதான் இந்த சுயநலச் சமுதாயம்.

இல்வாழ்வான் எப்படி இருக்க வேண்டுமென வள்ளுவர் கூறியுள்ளார். தன் குடிப்பிறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான், தன் குடும்பம் என்ற ஐவகை யாவரையும் காக்க வேண்டியது இல்லறத்தானின் தலையாயக் கடமை ஆகும் என்கிறார்.
“தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை”
எனும் குறள் விளக்கும்.

இன்றைக்கு குடும்பத் தலைவனும், தலைவியும் வினையாற்றவும், பொருள்தேடவும் செல்வதனால் பெரியோர்கள் முதியோர் இல்லத்திலே, குழந்தைகள் காப்பகத்திலே என்ற நிலை நிலவுகிறது. இது நல்லதன்று.

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”
அன்பு உள்ளவர்களே உயிர் உள்ளவர்கள். அன்பில்லாதவர்கள் எலும்பைத்தோலால் போர்த்திய வெறும் உடம்பைப் பெற்றவர்களே ஆவார்கள்.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலன் நன்மக்கள் பேறு”

குடும்பத்திற்கு மங்கலம் என்பது நல்ல மனைவியைப் பெறுவதே ஆகும். அதற்கு நல்ல அணிகலன்கள் என்பவை நல்ல மக்களைப் பெறுவதே ஆகும். அணியெனப் பிறந்த மக்களைப் பேணிக்காக்க வேண்டாவா? நாம் பெரியோர்களையும், பிள்ளைகளையும் பேணுதல் வேண்டும்.

நாம் நல்ல தமிழ்க்குடி மக்கள். நமது சிறப்பே விருந்தோம்பலில் தான் உண்டு. எவ்வளவு செல்வந்தர்களாய் இருந்தாலும் விருந்தினரைப் போற்ற வேண்டும். செல்வச் செழிப்போடு வாழுங்காலத்தே விருந்து போற்றுதல் வேண்டும்.
“உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல்ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு”

செல்வம் உள்ள காலத்தே வறுமை எதுவென்றால் விருந்தினரைப் போற்றாமல் வாழ்வது தான். இது அறியவேண்டியதை அறியாத பேதையரிடம் தான் உண்டாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
அனிச்ச மலர் முகர்ந்துப் பார்த்தாலே வாடி விடும். அது போல விருந்தினர் முகம் வேறுபட்டுப் பார்த்தாலே முகம் வாடிவிடுவர். எனவே விருந்து போற்றுபவர் இன்முகத்தோடு விருந்தோம்ப வேண்டும்.

சிலர் தன்னை விடப் பெரிய செல்வர்களுக்குத்தான் விருந்து கொடுப்பர். நட்பு கொள்வர். பசையுள்ளப் பக்கம் ஒட்டுவது போல செல்வம் உள்ளபக்கமே மக்கள் உறவு கொள்கின்றனர். கடின உழைப்பும், உண்மையும், நேர்மையுமுள்ள மனித நேயம் மிக்க பண்பாளன் ஏழையாய் இருந்தால் அவனை உலகம் மதிப்பதில்லை.
“அறம் எனும் பொருள் அறியார்
புறம் போகும் பொருள் பெற்றார்
உறவு எனும் பொருள் அறிவரோ?
திறம் எனும் பொருள் பெறுவரோ? சொல்!"
-மு. கவிதாராணி
இக்கருத்தினை
“பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு”
எனும் குறள் கூறும்.

பொருளால் எதுவும் நடக்குமெனக் கருதி, யாருக்கும் எதுவும் உதவாமல் சேர்த்து வைத்திருக்கும் மயக்க அறிவுடையவன் தன் பிறவியின் பயனையே பெறாமல் பெருமை இழந்து விடுவான் எனப் பொய்யில் புலவர் விளக்குகிறார். செல்வத்தின் பயன் ஈதலே!
”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”

வறுமைப் பட்டவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து அதன் மூலம் புகழ் உண்டாக வாழ வேண்டும். அந்தப் புகழைத் தவிர உயிருக்கு உறுதி தருவது வேறெதுவும் இல்லை. அது போல அறம் உணர்ந்தவராய்த் தம்மை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை அடைகின்ற வழியை ஆராய்ந்து, அறிந்து பெறவேண்டும். பெரியவர்களைத் துணையாகக்கொண்டு அவர் சொற்படி நடக்க முயல வேண்டும்.
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்”
என்பது வள்ளுவர் வாக்கு. மூத்தோர் சொல் அமிர்தம் எனும் பழமொழியும் இதனை விளக்கும்.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”- எனும் குறளிற்கு இணங்க பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”-எல்லோரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதனால் மேன்மையை அடைவார்கள். வள்ளுவர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் முறையினையே வலியுறுத்துகிறார்.

“வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு”
என்று கூறி எப்பொழுதும் ஊக்கமும் உற்சாகமும் உடையவர்களாக வாழவேண்டும்.
‘எண்ணித் துணிக கருமம்’ என்ற குறளில் எதையும் செய்வதற்கு முன்னால் பன்முறை சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்த பின் எடுக்கின்ற முடிவு தீர்க்கமானதாக இருக்க வேண்டும். அதில் எந்த தடுமாற்றமும் இருக்கக் கூடாது என்கிறார்.

“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்”

என்ற குறளில் அறிவிற் சிறந்த ஆன்றோர்கள், நல்ல அறிவினை உடையவர்கள் பயனற்ற சொற்களைப் பேச மாட்டார்கள். எனவே பயனுடைய சொற்களையே பேச வேண்டும் என்கிறார்.

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
பிறருக்குத் தீமை செய்தால் தனக்கு தீமை தானாக வரும். எனவே யாருக்கும் தீங்கு செய்யலாகாது.

“உள்ளியதெல்லாம் உடனெய்தும் உள்ளத்தான்
உள்ளான் வெகுளி எனில்”
சினத்தை மறந்தவன் நினைத்ததை முடிப்பான். நீ நினைத்ததை வல்லமை பெற வேண்டுமாயின் சினத்தை விட்டுவிட வேண்டும்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
உயிர்களை அழிக்காதவனை எல்லா உயிர்களும் தொழும். புலால் உணவு கூடாது. தாவரங்களுக்கு வலி உணர்வு இல்லை. மற்ற உயிர்களுக்கு அது உண்டு. எனவே மற்ற உயிர்களையும் தம் உயிர் போல எண்ணவேண்டும். புலால் உணவினைத் தவிர்க்க வேண்டும்.

மாணவப் பருவத்திலே முக்கியமாக புலால் உணவினைத் தவிர்ப்பது நல்லது. தேர்வு சமயங்களில் புலால் உணவினைத் தவிர்க்கவும். பள்ளி வேளை நேரங்களில் புலால் உணவு கொண்டு வந்து உண்பதையும் தடை செய்துள்ளனர். எப்பொழுதுமே புலால் உணவினைத் தவிர்ப்பதனால் மாணவர்கள் சுறுசுறுப்புடன் இருக்கலாம். எளிதாக சீரணிக்கக் கூடிய உணவு வகைகளை உண்பதே நமக்குப் பொருத்தமானதாகும். அந்தந்த இடங்களில் வசிப்பவர்கள் அங்கு நிலவும் தட்பவெப்பங்களுக்கு ஏற்பவே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடை அணிந்து கொள்ள வேண்டும். வாழும் இடங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். நாகரிகம் என்ற பெயரால் நமக்குப் பொருந்தாத உணவு, உடை, உறைவிடம் அமைத்து கொள்வது எவ்வகையில் அறிவுடைமை ஆகும். எவ்வாறு நமக்கு நலன் விளைவிக்கும். பகுத்தறிவினைப் பயன்படுத்த வேண்டும். எனவே செய்ய வேண்டிய செயல் வகை அறிந்து இடம், காலம் இவற்றை அறிந்து வெல்லும் வகையறிந்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது.

இழந்தால் பெற முடியாதது உயிர் மட்டுமல்ல, காலமும் கூட. எனவே காலத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு காலத்திலும் மனிதன் தன் கடமைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும். குழந்தைப் பருவத்தில் அறிவுடன் சூழ்நிலையை உணர்ந்து வளர வேண்டும். இளமையில் கல்வி கற்க வேண்டும். பெற்ற தாய் தந்தையரின் உதவியோடு நன்றாக கல்வி கற்று அறிவிலே தெளிவு உடையவராக வளர வேண்டும்.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்”
“மகன் தந்தைக் காற்றுமுதவி இவன்தந்தை
எந்நோற்றான் சொல் எனும்சொல்”
எனும் குறட்பாக்களுக்கு உதாரணமாக மக்கள் (குழந்தைகள்) வளர வேண்டும். தாயும், தந்தையும் பெற்றப் பிள்ளைகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். தாய் அன்பும், பரிவும் பொங்க நல்ல பழக்க வழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி வளர்த்த வேண்டும். தந்தை தன் மகனுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
எனும் குறட்பாவிற்கு ஏற்ப கற்றவர் நிறைந்த அவையிலே தன் மகனை முதன்மையானவனாகச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மக்கள் பரிவோடும், பாசத்தோடும் வளர்வர்.மேலும் நம் பண்பாடு, கலாச்சாரம் இவற்றிற்குப் பாதுகாவலராகவும் விளங்குவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தம் ஐம்புலன்களைக் காத்து வாழ வேண்டும்.

“சொல்லுக சொல்லைபிறிது ஒருசொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து”
தான் சொல்லக் கூடிய கருத்திற்கு மாற்றாக எதுவும் இல்லை என்பதை உணர்ந்த பின்னரே தாம் சொல்ல நினைத்ததைச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் கருத்துடன் செயல்படவேண்டும். அவ்வாறு சிந்திக்காமல் எடுத்தோம், கவிழ்த்தோம் எனப் பேசினால் பேசுகின்ற பேச்சிலே சொற்குற்றம் ஏற்படும். எனவே நாவை அடக்கிக் காக்க வேண்டும். மொழியைப் பிறர்க் கேட்டு மகிழும் வண்ணமாக நாம் பயன் படுத்திப் பழக வேண்டும். நல்லது அல்லாத சொற்களைப் பேசுவதனால் தாமும், பிறரும் துன்பப்ப்ட நேரிடும். இதனை ‘யாகாவராயினும் நாகாக்க’ எனும் குறளில் விளங்கும்.

தானங்களில் சிறந்தது நிதானம். பொறுமை ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி. எனவே பூமியைப் போன்று பொறுமை கொள்ள வேண்டும்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.
எனும் உண்மைக்கேற்ப பொறுமை காக்க வேண்டும்.

தம் பெருமையை பிறர் இழிவாகப் பேசினாலும் அல்லது குறைவாக மதிப்பிட்டாலும் பொறுமை காக்க வேண்டும். பெரியவர்களை மதித்துப் போற்ற வேண்டும். நாம் முன்னேற நல்ல பெரியவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். பண்பினால், அன்பினால் உயர்ந்தவர்களை, அறிவினால், உழைப்பினால் முன்னேறிய பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். அதனால் நாம் நல்ல வழிகாட்டுதலைப் பெறுவதோடு உயர்ந்த நிலையையும் பெறுவோம்.

பிறர் நலன் அடைவதைக் கண்டு பொறாமைப் படக்கூடாது. அது நம் முன்னேற்றத்திற்கு தடையாய் அமையும்.பொறாமை யாவருக்கும் தீமையையே தரும்.
“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்”
-என்று கடுமையாக எச்சரிக்கிறார்.ஒருவனுக்குக் கொடுப்பதைத் தடுப்பவனுடைய சுற்றம் உடுப்பதும்,உண்பதும் இன்றிக் கெடும்.

எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும். நட்புடன் பேச வேண்டும். நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாமே தவிர மாறாக எதனையும் செய்யக் கூடாது. உள்ளத்திலே அன்பு வைத்துப் பழகாதவர்கள் நெருங்கிய நண்பர்களாய் உள்ளவர்களைக் கூட புறங்கூறிப்பிரித்து விடுவர். பிறரது குற்றத்தைக் காண்பது போலவே தம்முடையக் குற்றத்தையும் காணும் தன்மை வந்து விட்டால் நாம் யாரையும் குறை கூற மாட்டோம். ”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” அன்றோ? எனவே அன்பில்லாதவர்கள் புறம் கூறுவர். அன்புடையவர்கள் புறம் கூற மாட்டார்கள்.

ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது.
”நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
பிறர் அறியாமல் செய்த தீமையை வேண்டுமானால் மறந்து விடலாமே தவிர நன்மையை ஒருபோதும் மறக்கக் கூடாது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

பெரியோர்களைப் பிழையாமை வேண்டும். பெரியவர்களுடைய மனம் புண்படும்படி எதையும் செய்யலாகாது.
”பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்”
–என்று குறள் கூறும்.
இதன் கருத்து என்னவென்றால் ஆற்றல் மிக்கப் பெரியோர்களைப் போற்றி மதிக்காவிடில் அவர்களால் நீங்காத துன்பத்திற்கு ஆளாக நேரிடும். எனவே பெரியோர்களை மதித்துப் போற்ற வேண்டும்.

“வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை”
-போர்வீரர்களைப் பகைத்துக் கொண்டாலும் தீமையில்லை. ஆனால் சொல் ஏர் உழவரான அறிஞர்களோடு ஒரு போதும் பகை கொள்ளக் கூடாது. அதனால் பெரிய துன்பம் விளையக்கூடும்.

“அன்பிலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு”
எனும் குறளில் தன்னைச் சேர்ந்தவரிடம் அன்பு இல்லாதவனாய், தனக்குத் தக்க துணை இல்லாதவனாய்த் தானும் வலிமை இல்லாதவனாய் இருப்பவன் ஒருபோதும் பகையை ஒழிக்க முடியாது, வெற்றியையும் பெறமுடியாது என்பதை விவரிக்கிறார்.

எனவே தன்னைச் சேர்ந்தவரிடம் அன்பு செய்யத் தெரியவேண்டும். தனக்குத் துணைவர்களைப் பெற வேண்டும். தனது திறமையை, வலிமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் வெற்றி பெற இயலும்.

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா. அறிவில்லாதவர் தமக்குத் தாமே செய்து கொள்ளும் துன்பம் அவர்கள் பகைவருக்குக் கூட செய்ய முடியாததாகும். அறிவில்லாதவர்களுக்குப் பிறர் துன்பம் தர தேவையில்லை. தனது அறிவற்ற தன்மையினால் தானே கேட்டினை வரவழைத்துக் கொள்வர்.

சிற்றறிவு என்பது நான் அறிவு உடையவன் என்று தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து”
பெருமைக்குரிய நல்லறிவுடைய ஆன்றோர்கள், சான்றோர்கள் பணிவுடன் திகழ்வார்கள். அறிவற்றவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வார்கள். எப்பொழுதும் இவ்வாறு திகழக் கூடாது.

“ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்”
உயர்ந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளை அறிந்தும், பிறருக்கு அவற்றை விளக்கம் சொல்லியும் வாழ்கின்றவன் அந்த உயர்ந்த கருத்துக்களைத் தன் வாழ்வில் கடை பிடிக்கவில்லை என்றால் அவனை விட அறிவில்லாதவன் உலகில் இல்லை. எனவே கற்றுணர்ந்து பிறருக்கு விளக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. உணர்ந்த கருத்துகளை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

ஒரு மனிதன் சிறந்தவனாக வேண்டும் எனில் அவன் மனம், மொழி, செயல் யாவும் ஒன்றாய் இருத்தல் வேண்டும். மனதில் நினைப்பது ஒன்றும், சொல்வது வேறொன்றும், செயல் மற்றொன்றும் செய்வாரை யார் மதிப்பார்கள்? யாரும் மதிக்க மாட்டார்கள். மனம், மொழி, செயல் யாவும் ஒன்று போல் இருத்தல் வேண்டும்.

தீயவர்களுடன் நட்பு கொள்ளக் கூடாது. நல்லவர்கள் அல்லாதவர்களோடு நாம் பழகக்கூடாது. அவர்களை விட்டு விலக வேண்டும். அன்பின் மிகுதியால் நலம் செய்வார் போலத் தோன்றினாலும் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதை விட தேய்வதே மேலானது. ஆனால் உண்மையான அன்பு உடையவரின் நட்பைப் போற்ற வேண்டும். பழகிய நண்பர் உரிமையோடு செய்யும் செயலை இழிவானது என்று எண்ணாமல் ஏற்றுக் கொள்வதே பழைமை என்பதாகும்.

நண்பர்களை நாம் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவனுடைய குணத்தையும், குடிபிறப்பையும் அவனிடம் உள்ள குறையையும், அவனைச் சேர்ந்தவர்கள் இயல்பையும் அறிந்தபின் நட்பு கொள்ள வேண்டும். இதனை
“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு”
எனும் குறள் விளக்கும்.

முகம் மட்டும் மலரும் படியாகப் பழகுவது நட்பாகாது. மனமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு உண்மையுடன் பழகுவதே உயர்ந்த நட்பு ஆகும். இதனை “முகநக நட்பது நட்பன்று” எனும் குறள் விளக்கும்.

கடல் போன்ற கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டது திருக்குறள். அதில் உள்ள கருத்துகளை உணர்ந்து வாழ்வில் கடைப்பிடித்தால் நம் புரட்சிக் கவிஞன் சொன்னது போல தமிழனென்று சொல்லலாம், தலை நிமிர்ந்தும் நிற்கலாம்.
தன்னை உணர்ந்து நூறு சதவீதம் கவனமொடு நல்வினையை செயலாற்றும் பொழுது பாரம்பரியம் மிக்கப் பெருமையை நாம் மீண்டும் பெறுவோம். நமது பண்பாடு, கலாச்சாரம் புத்துணர்வு பெறும் மற்றும் புது எழுச்சி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குறள் வழி நடப்போம்; குணக் குன்றெனத் திகழ்வோம்; நாமே!
வாழ்க வளமுடன்!

Wednesday, September 9, 2009

தமிழுணர்வு!


தமிழப் பேச முடியல
தமிழப் பேச முடியல
தமிழ்நாட்டுல பிறந்திருந்தும்
தமிழ்மொழிய படிச்சிருந்தும்
தமிழப் பேச முடியல.
பன்மொழிய படிச்சவருதான் பாரதியாரு
பாரினிலே தமிழப் பத்தி என்ன சொன்னாரு
யாமறிந்த மொழிகளிலே இனிமையினாரு
தேமதுர தமிழோசை பரப்பனுன்னாரு
தமிழ்நாட்டுல பன்துறையில தமிழும் இருக்குது
தமிழிருக்க பிறமொழிதான் ஆட்சி செய்யுது
தமிழருன்னா தமிழை முதலில் கத்துக்கவேணும்
தமிழ் படிச்சு பன்மொழியும் தெரிஞ்சுக்கவேணும்
உலகமெங்கும் தமிழறிவை வளர்த்திடவேணும்
உள்ளபடி தமிழுணர்வே ஆட்சி செய்யோணும்!

Saturday, September 5, 2009

“ஆசிரியர் தின வாழ்த்து”

ஆயிரம் ஆயிரம் மழலையர்க்கு அன்பினை வழங்கும் அட்சயப் பாத்திரங்கள்!
அறியாமை இருள் போக்கி அறிவின் சுடரேற்றும் அணையா தீபங்கள்!
ஓயாமல் உழைத்துழைத்து உன்னத சமுதாயம் தரும் உயர்ந்த உள்ளங்கள்!
மெழுகெனவே தானுருகி பிறர்க்கு ஒளி தரும் தியாக தீபங்கள்!
அறிவு பசி தீர அறிவினைக் கேட்டவருக்கு கேட்டவண்ணம் தரும் கற்பக விருக்ஷங்கள்!
மழலையர் என்ற நிலையினின்றும் மாணவர் என்ற நிலைக்கு உயர்த்தும் ஏணிப் படிகள்!
மாணவரின் ஆக்க நிலை உயர்த்த வாய்த்த முன்மாதிரிகள்!

சக்தியுள்ள சமுதாயம் படைப்பதனால் இவர்கள் பிரம்ம சக்தி!
நற்குணங்களை என்றும் காப்பதனால் இவர்கள் விஷ்ணு சக்தி!
தீய சக்திகளை அழிக்கும் மாணவம் படைப்பதனால் இவர்கள் சிவசக்தி!
அனைத்துமாகி விளங்கும் எங்கள் ஆசான்களே பரம்பொருளின் சக்தி!
அன்பின் வழி வந்து அறிவின் சுடர் தந்து அறம் பல தழைக்கச் செய்யும்
ஆசான்கள் தாள் போற்றுவோம்! அடிமலர் பணிந்தேத்துவோம்!
அறிவின் ஒளியேற்றுவோம்! நாமே!!

Friday, September 4, 2009

தம்பிப் பாட்டு


சின்ன சின்ன தம்பிகளே
கொஞ்சம் நில்லுங்க! இந்த
அன்னை சொல்லும் சொல்லைக்
கொஞ்சம் காதில் வாங்குங்க!

எண்ணம் தன்னை உயர்வாய்
வைக்க வேணுங்க! அட
எண்ணம் போல வாழ்வென்பதை
நினைவில் கொள்ளுங்க!

உடலைத் தந்து உயிராய்
நம்மை வளர்த்தது யாருங்க?
உயர்வையே நாடும் உத்தமர்
நம் பெற்றோர் தானுங்க!

கல்விக் கண்ணைத் திறந்து
வைத்த கடவுள் யாருங்க?
கடமையே தம் பெரிதாய்
கொண்ட ஆசான் தானுங்க!

மாதா பிதா குரு தெய்வம்
மனதில் கொள்ளுங்க! நீங்க
மாறாத அன்போடு எல்லோரையும்
மரியாதை செய்யுங்க!

சத்துள்ள உணவினை மட்டும்
எப்போதும் உண்ணுங்க!
அளவாய் உண்டு வளமாய் வாழக்
கற்றுக் கொள்ளுங்க!

உணவு தந்த எல்லோருக்கும்
நன்றி சொல்லுங்க! நித்தம்
உணவு எல்லோருக்கும் கிடைக்க
வேண்டுமென்று எண்ணிக் கொள்ளுங்க!


ஒழுக்கம் தன்னை உயிராக
மதிக்க வேணுங்க! நீங்க
உடலாலும் மனதாலும் என்றும்
உண்மையாய் இருங்க!

சொன்ன சொல்லை சொன்ன
வண்ணம் காக்க வேணுங்க!
ஒரு சொல்லு, ஒரு வாக்காய்
இருக்கப் பழகுங்க!

நல்லது மட்டும் எப்பொழுதும்
பழகிக் கொள்ளுங்க! நீங்க
நல்லது அல்லாததை அப்படியே
விட்டு விடுங்க!

கல்விக் கூடம் என்பதொரு
கலைக் கூடங்க! அதில்
உங்களை நீங்களே உருவாகிக்க
கற்றுக் கொள்ளுங்க!

கடின உழைப்பும் விடாமுயற்சியும்
கண்களைப் போலங்க! அதனை
கைக் கொண்டு எல்லோரும்
முன்னுக்கு வாருங்க!

சொன்ன கருத்து அத்தனையும்
உளியைப் போலங்க! அந்த
உளியை எடுத்து உங்களை
நீங்களே செதுக்கிக் கொள்ளுங்க!



உன்னை நீயே உருவாக்கு! உன்னத சமுதாயத்தின் கருவாகு!

தாய் தந்தையரின் தயையினால் உடல் உருவாவதும் உயிர் திருவாவதும் இயற்கை தந்த வரம். இப்பெரும் வரத்தினால் பிறந்தோம், பிற சூழ்நிலைகளின் அரவணைப்பில் வளர்ந்தோம். ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்றிராமல் நாம் எதையாவது செய்துவிட்டுப் போகலாமே!

எதையாவது செய்வதென்றால் யோசித்துப் பாருங்கள்! இவ்வுலகில் புதிதாக எதையேனும் செய்யவியலுமா? நாம் செயல் செய்ய எவ்வாறு கற்றோம்? எவரையேனும் பார்த்து, செயல் புரிவதைப் பார்த்து அதைப் போலச் செய்யக் கற்றோம்.

குழந்தைப் பருவத்திலிருந்து வளர வளர நாம் பார்க்கும், பார்த்த சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் இவற்றால் நம்மையும் அறியாமல் அனைத்தையும் கற்றுக் கொள்கிறோம். நாம் பார்த்திராத, இதுவரைக் கேட்டிராத செய்திகளைப் பற்றி நாம் அறியமாட்டோம். முற்றிலும் புதிதான ஒரு செய்தி என்றால் நிச்சயம் நாம் யோசிப்போம்!

சிந்தித்துப் பாருங்கள்! இந்த உலகம் ஒன்றுதான். இதில் அவரவர் பிறக்கக்கூடிய இடம், காலம், வசதிகள், இயற்கை அமைவு, சூழ்நிலை போன்றவற்றின் தூண்டுதலுக்கு ஏற்ப எண்ணங்கள் மற்றும் செயல்கள் அமைகின்றன.

இவ்வேறுபாட்டினால் பல்வேறு வகையான மனிதர்கள் உருவாகின்றனர். உண்மையில் சொல்லப் போனால் உலகம் உன்னை உருவாக்குவதில்லை. உனக்கேற்ற உலகத்தினை நீயே உருவாக்குகின்றாய்!

சிலரால் இதை ஏற்கமுடியாது. அவர்கள் தனக்கு ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தன்னையன்றி பிறரைக் காரணமாக்கக் கூடிய மனப்பான்மை உள்ளவர்கள். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமே பொறுப்பல்லவா? “நன்மையும் தீமையும் பிறர் தர வாரா” என்பது முதுமொழி அல்லவா! அதுவே அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மையுமாகும்.

யோசித்துப் பாருங்கள்! நம்மை நாம் உருவாக்குகிறோமா இல்லை சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் நம்மை உருவாக்குகின்றனவா? மேலோட்டமாகப் பார்த்தால் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் தான் நம்மை உருவாக்குவதாகத் தோன்றும். இல்லவே இல்லை, ஒரு விழிப்புணர்வோடு ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள்! நம்மை நாம் தான் உருவாக்குகிறோம். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பது வள்ளுவன் வாக்கு.

இவ்வுலகில் நமக்கு உடல், உயிர் தந்து உயர்வான அனைத்து உணர்வுகளும் தரப்பட்டுள்ளன. நாம் ஒரு காலிப் பையினைப் போல இலேசாக இருக்கிறோம். நாம் எதனை விரும்புகிறோமோ அதனை எடுத்து நம்முள் திணித்துக் கொள்கிறோம். நம்மை நாமே இத்தகையவன் என அடையாளம் காட்டுகிறோம். நம்மை விமர்சிப்பது நமது மனமே. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் செயலாற்றுவோம்.

என் எண்ணத்தில் நான் நல்லவன் என ஊறிப் போகிறது என வைத்துக்கொள்ளுங்கள்! என் மனம் என்ன சிந்திக்கும்? எதனைச் செய்தால் நல்லவன் எனப்படுவோம், நல்லவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென நான் நினைக்கிறேனோ அதனைப் போலவே நான் செயலாற்றுவேன். ஏனென்றால் என்னை நான் நல்லவன் என அடையாளம் காட்ட விரும்புகிறேன்.

அதனைப் போல தான் நல்ல உணர்வுகளையும் எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டு உன்னை நீயே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

“நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகின்றாய்! நீ அதுவாகு!” என்பது வேதத்தின் சாரமன்றோ?

உன்னை நீ உணர்ந்த நொடியிலேயே திருத்திக் கொள். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு முன்னேறப் பார். பிறர் நம்மை எப்படி நடத்தவேண்டுமென நாம் உணர்கிறோமோ அப்படியே நாம் பிறரை நடத்தவேண்டும்.

கொடுத்துப் பெறுவது மரியாதை மட்டுமல்ல, மனமகிழ்வையும் தான். இது வரை உலகில் நீ உணர்ந்த அனுபவ அறிவு உனக்குள்ளே பல பதிவுகளாக உள்ளன. இன்னும் சிறப்பாக இப்பிறவியைக் கடக்க உள்ளுணர்வின் உந்துதலோடு உன்னை நீயே உருவாக்கு! நன்மையும் தீமையும், வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைதான். நம் மனத்தின் போக்கினைக் கட்டுப்படுத்தப் பழகிவிட்டால் எல்லாமே நமக்கு இனிமையானதாகி விடும். நீ உன்னை உணர்ந்து உன் வசமாகி விட்டால் உலகம் நொடியில் உன் வசமாகி விடும். எனவே உன்னை நீயே உருவாக்கு! உன்னத சமுதாயத்தின் கருவாகு!!

Tuesday, September 1, 2009

இறைவணக்கம்!

சத்யம் சத்யம் இறைநிலையே!
சாத்யம் இருக்கு அனுக்கிரஹியே!
உன்னால் முடியும் முடியுமென்றே
உன்திருப் பாதம் சரணடைந்தேன்!

என்றும் எங்கும் திருவருளே!
நின்று பொழியும் கார்முகிலே!
இன்றும் என்றும் உனதருளே
வேண்டி நிற்கிறோம் உண்மையிலே!

நன்மை பலவும் பெருகிடவே
நாடியே அருளும் நல்லதுவே!
இம்மையும் மறுமையும் சிறந்திடவே
இனிதே அருள்வாய் கண்மணியே!

மெய்மை மென்மை மேன்மையென
உய்யும் பொருளில் உறைவதுவே!
மேன்மை மேன்மை மேன்மையதை
மேலும் மேலும் தருவதுவே!

கல்விப் பயிலும் கண்மணிகள்
கருத்துடன் பயில அருள்புரிவாய்!
செல்வம் யாவும் சேர்ந்துநிதம்
சிறப்பாய் வாழச் செய்திடுவாய்!

ஆற்றல் மிக்க வீரனென
அடியேனையும் நீ ஆக்கிடுவாய்!
தோற்றப் பொலிவுடன் என்னையும்நீ
துலங்கிட செய்தே துணைபுரிவாய்!

அன்பும் அருளும் ஒருங்கிணைந்தே
அடியேன் கைவர அருள்செய்வாய்!
பணிவும் துணிவும் சேர்ந்தினிதே

அணிசெய்திட நீ மனம்மகிழ்வாய்!

Sunday, August 30, 2009

மரம் வளர்ப்போம் ; நலம் பெறுவோம் !




மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.

சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :
தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! ‘மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலை’ என்ற வாசகம் நாம் அறிந்ததே அல்லவா! ஆம், மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும்.
எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!

மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. மேலும் கப்பல் கட்டுவதற்கும், மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்றன.

இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.. இவை நம் நாட்டின் செல்வங்கள். அக்காலத்தில் தாத்தா மரம் நட்டால் பேரன் பயனடைவான். இக்காலத்தில் மரத்தினை வைத்தவனே பயனையும் துய்க்க ஆசைப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை. விஞ்ஞானத்தினால் முடியாதது என்ன? செயற்கை உரங்களைச் சேர்த்து உடன் பயனெய்த வழிவகை செய்கிறோம். ஆனால் அதன் பயனும் நமக்கு குறைந்த அளவிலேயே நன்மை தருகின்றது என்பது வெள்ளிடை மலை அல்லவா? ஏன் இந்த அவசர கதி? மனிதனின் பொறுமை என்னவாயிற்று? நிதானம் எங்கே போயிற்று? நிதானம் பிரதானம் அல்லவா! எனவே எல்லோரும் இதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கையின் வழியில் செல்வோம்! மரங்களையும், பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம்! பயன் பெறுவோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்!!

Monday, August 17, 2009

சுற்றுச் சூழல் அவசியம்


முன்னுரை :

சுற்றுச்சூழலைக் காத்திடுவோம்!
சுகமாய் வாழ வழிவகுப்போம்!
வெற்று வார்த்தை இதுவல்ல,
விளையும் நன்மையோ பலப் பல!
- பி.வி.கிரி.

இன்றைய சூழ்நிலையில் எல்லோர் இதயத்திலும் இருக்க வேண்டிய கருத்து இதுவேயாகும்.


சுற்றுச்சூழல் :

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றப் பொருள்களின் தொகுப்பே சுற்றுச்சூழலாகும். பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நன்மைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து பார்த்தால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே விஞ்சி நிற்கின்றன.


அன்றைய நிலை :

பண்டைக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நிறைந்த முழுமையான மெய்யுணர்வினைப் பெற்றிருந்தான். அவனிடம் தொலைநோக்குப் பார்வை, தன்னலமற்றத் தன்மை நிறைந்து காணப்பட்டது. அதன் விளைவாய் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ்ந்து காட்டினான்.

இன்றைய நிலை :

மெய்ஞானம் ஒடுங்கி விஞ்ஞானம் தலைதூக்கியது. கேள்விகளே அறிவின் விழிப்புநிலை என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைதி போயிற்று. வெற்று ஆரவாரங்கள் தலை தூக்கின. பொதுநல நோக்கற்ற தொலைநோக்குப் பார்வையற்ற சுயநலச் சமுதாயம் வேரூன்றியது. விளைவு?...... இவ்வாறு விளைந்ததுதான் இருபதாம் நூற்றாண்டு.

நிகழவேண்டிய மாற்றம் :

இன்றைய சூழ்நிலையை நான் சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. நாம் வசிக்கும் இந்த உலகை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐம்பெரும் பூதங்களுக்கும் கேடு விளையாவண்ணம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும். மனித இனத்தின் அறிவின் முதிர்ச்சியால் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், இயற்கையின் செல்வமாகிய காடுகள், ஆறுகள், அருவிகள், மலைகள் இவையாவற்றின் நலன் குறையலாமோ?

நாம் இயற்கையைப் பாதுகாத்தால், நம்மையும் இயற்கை பாதுகாக்கும். தூய்மை, ஒழுக்கம், நேர்மை, வாய்மை, அடக்கம் நிறைந்த மனித சமுதாயம் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். நலம் யாவும் வழங்கும் நல்லதொரு சூழ்நிலை உருவாக்கவேண்டும்.

முடிவுரை :

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு”
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க நல்லதொரு சூழலை உருவாக்க எண்ணித் துணியுங்கள்! வெற்றி நிச்சயம்!!


குறிப்பு :
ஏர்டெல் நிறுவனம், ஈரோடு காஸ்மாஸ் ரோட்டரி சங்கம், அலோஹா மற்றும் போம்சி பிஸ்கட் இணைந்து நடத்திய மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை.

Sunday, August 9, 2009

அருந்தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு ………



ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ‘புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவிற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் ஐயா அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.
இடம் : வ.உ. சி. பூங்கா மைதானம், ஈரோடு.
நாள் : 11/08/2009
நேரம் : மாலை 6.00 மணி.


அன்புள்ள கலாம் ஐயாவிற்கு !
பணிவான வணக்கங்கள்.
ஐயா ! நீவீர் -

அன்பினில் அமுதம் ! அறிவினில் இமயம் ! அடக்கத்தில் பேரண்டமே !
பண்பினிலும் பரிவினிலும் பார் புகழும் பசிபிக் பெருங்கடலே !
அறிவியல் பார்வையில் ஆற்றல் மிக்க சூரியன் நீர் !
நடுத்தரக் குடும்பத்தில் பிறப்பு ! நாடாளும் ஜனாதிபதியாக உயர்வு !
எப்படி முடிந்தது உம்மால் ! இடையறாத உழைப்பு !
எதிலும் சோர்ந்து விடாத துடிப்பு ! எடுத்ததை முடிக்கவேண்டும் என்ற முனைப்பு !
இதனைப் பெறச் சாதகமானவை சூழ்நிலைகளா ?
இல்லை, கிடைத்த சூழ்நிலைகளை நீர் சாதகமாக்கிக் கொண்டீர் !
ஒவ்வொரு இந்தியனுக்கும் முன் உதாரணம் நீர் ! - உம்மையே
முன்னோடியாய்க் கொண்டு முன்னேறும் சமுதாயத்தின்
முனைப்பில் நானும் ஒரு சிறு துரும்பு !
கண்ணுக்கு நேரே நாங்கள் காணும்
கருணையின் உருவம் ! கடமையின் வடிவம் நீர் !
உம்மைக் கண்டால் இந்தியச் சட்டம் எழுந்து வந்தது போல் உள்ளதே !
எல்லா மாணவர்களும் அறிவில் விழிப்பு பெற நீர்
எடுக்கும் முயற்சிகள் கைகொடுக்கும் !
இந்தியா வல்லரசெனப் பெயரெடுக்கும் !
அதிகாரத்தில் ஆடும் நாடுகளை ஒடுக்கும் !
ஆற்றல் மிக்க வல்லமையை அன்பின் வழி கொடுக்கும் !
அண்டமெங்கும் அமைதி நிலைக்கும் !
ஆனந்தம் எல்லா உயிர்களும் துய்க்கும் !
பாசமுள்ள தமிழ்ச் சான்றோரே ! நேசக்கரம் நீட்டும் நல்லவரே !
உம்மை நம்மூருக்கு வருக ! வருக ! என வரவேற்று மகிழ்கிறோம் !
நம் மக்கள் உய்ய நற்கருத்துகளை தருக ! தருக ! என அழைக்கிறோம் !
உம் கருத்துகளை செவிமடுக்க விழைகிறோம் !

கருத்தாய்வுப் போட்டியில் கலந்துகொள்வோம் !

அன்பார்ந்த வாசக பெருமக்களே !

இலக்கிய ஆர்வமுடைய நமக்கு ‘மணற்கேணி 2009’ கருத்தாய்வுப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவரம் அறிய தமிழ்மணம்.நெட் – ஐ அணுகவும்.

இப்போட்டிக்கு நானும் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

Sunday, August 2, 2009

வானியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு…….


வானவியல் ஆராய்ச்சியினால் வானளாவ புகழ் சேர்த்தவர் நீர்!
பெயருக்கேற்ற வகையில் தமிழ்ப் பேருரை வழங்கியவர் நீர்!
நயம்பட நல்ல தமிழிலே செவிக்குணவு வழங்கியவர் நீர்!
நன்றி நவிலல் நாவளவில் நில்லாமல் நாபியில் இருந்து நவின்றவர் நீர்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்ற பாரதியின்
பாடல் வரிகளைத் தன் தாரக மந்திரமாய் கொண்டவர் நீர்!
முன்னேற்றப் பாதையில் முழுதும் முயன்று - பாரதத்தை
முன்னுக்குக் கொண்டு வந்தவர் நீர்!
சந்திராயன் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவி அதன்
சுழல் வட்டப் பாதையில் சுழல விட்டு வெற்றி வாகை சூடியவர் நீர்!
அண்ணா பல்கலைக்கழகத்தினால் முனைவர் பட்டம் பெற்றவர் நீர்!
அண்ணா! நீவீர் இன்னும் பல சாதனைகள் படைக்க
திண்ணமாக வாழ்த்துகிறோம்! உம்
எண்ணம் போல் மேன்மையடைய
இன்னும் இன்னும் இன்னும் பல
விருதுகளும், பட்டங்களும், வாழ்த்துக்களும் பெற்று
கன்னல் மொழியினைப் போல்
கன்னித் தமிழினைப் போல் வானந்தன்னில் உள்ள பல கோடி
நட்சத்திரங்கள் போல்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்!!

இன்னிசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு……….


இன்னிசையால் இமயமென உயர்ந்து நிற்கும் இளைஞனே!
பனிமலையே! பணிவுள்ள மலையே!
உனக்கென் உள்ளார்ந்த வாழ்த்துகள்!!

பனித்துளியாய், குளிர்நிலவாய் யான்தரும் வாழ்த்துகள் யாவும்
பனிமலையே உன்னை என்செய்யும்!
இன்னுமோர் அணியெனவே உனக்கு அணி செய்யும்!!

வெளியுலகில் உள்ளதிலே நாட்டங்கொண்டு
தன்னை உணராமல் முழுமையடையாமல்
முடிந்துபோகும் மானிடர்கள் பலர்!!

தன்னையறிந்து நூறு சதவீதம் கவனமொடு செயலாற்றும்
உன்னைப் போல் ஆர்வலர்கள் ஊர் முழுதும் பெருகவேண்டும்!
ஏன்? இந்த உலகம் முழுதும் பெருக வேண்டும்!!

உடலில் ஓடும் குருதியின் இசையறிந்தவன் நீ!
உள் இயங்கும் உயிரோட்டம் உணர்ந்தவன் நீ!
செயலாற்றும் வகையறிந்து செய்து முடிக்கும் திறம்பெற்றவன் நீ!!

சிந்தையிலே கள்ளமற்ற உண்மை உரம் பெற்றவன் நீ!
நாடி நரம்புகளில் ஓடும் காற்று, வெப்பம், குருதி, உயிர்
இவற்றின் நாட்டியம் அறிந்தவன் நீ!
அவற்றை ஜதிகளாய், ஸ்ருதிகளாய் ஸ்வரம் பிடிப்பவன் நீ!!

உயிருள்ள இசையினை உருவாக்கும் வித்தகன் நீ!
உன்னிசையே மனநோய் போக்கும் மாமருந்து!
இன்னிசைக் கலைஞனே! நீயொரு இனிய மருத்துவனே!!

இசை கேட்பதால் மனதின் இறுக்கம் தளர்கிறது, மனமோ மலர்கிறது!
அமுதமென தந்துவிட்ட இசையினால் உயிர் இறவா நிலை எய்துமே!
உனக்கு உயிரோடு இருக்கும் போதே புகழுடம்பும் கிடைத்துவிட்டதே!!

நீ வழங்கும் இசையினால் நிமிர்ந்து நின்றது மனித இனம்!
நின்னால் தலை நிமிர்ந்தவைகளுள்
நம் நாடும் மொழியும் அடங்குமே!!

இந்தியனே! தன்னலமில்லாத் தமிழனே! இன்னிசைப்புயலே!
நினக்கு டாக்டர் பட்டம் இனிதாய் பொருந்துகிறதே!
அண்ணா பல்கலைக்கழகம்தான் அழியாநிலையெய்தியது
உனக்குப் பட்டம் தந்ததினால்!!

புயலே! உனக்குப் பூட்டிய பட்டத்தினால்
பல்கலைக்கழகமும் புகழிடம் பெற்றிட்டதே!
இந்தியாவின் மகத்துவத்தை உணர்த்த வந்த நீ
இன்னுமோர் மகாத்மாவே!!!

Sunday, March 22, 2009

படைப்புகளில் பா. விஜய் ……..


ஆலம் விழுதெனவே அன்புத் தமிழ்த் தழைக்க
தோல்வி கண்டு துவளாமல் வேள்வித் தீயென வெகுண்டு
தன்னுணர்வினைத் தனக்குள்ளேத் தீப்பொறியாய்த் திகழவைத்து
சுடும்நெருப்பெனவே உறுமுணர்வினை உள்நிறுத்தி யுறம்பெற்று
கடும் உழைப்பினால் உலகம் கண்டுணரும் நிலையெய்தி
பாவினைத் தன் முதலெழுத்தாக்கி பெயரிலே வெற்றியைத் தேக்கி
நாவினில் நற்றமிழ் பொருந்த நானிலம் போற்றும் புகழ் பெற்றவன்.
பா. விஜய் என்றவுடன் பாவின் இனிமையறிய
ஆர்வமுடன் உள்ளுணர்வு ஆர்ப்பரிக்கும் பேறுபெற்றவன்
ஊர்முழுதும் தானறியும் உலகுதமிழருள் ஒருவன்
கார்முகிலாய் கவிதைமழை காட்டாறாய் கருத்துக்களை(லை)ப்
பார்முழுதும் பரப்பும் விதம் படித்திடவும் படைத்திடவும்
நாள்முழுதும் நானறிந்து நற்றமிழில் உரைத்திடவும்
தேன்முகிலாய் தானுணரும் சிறப்பான கவிதைகளை
வாய்மையென வாழ்த்துரைத்து வாழியெனப் போற்றிடுவேன் !
சமுதாயச் சரித்திரத்தில் சாமர்த்தியமாய்ச் சேர்ந்தவிதம்
அமுதெனவே அறிந்து சொல்ல ஆர்வமுடன் வந்துவிட்டேன்
இனிதான இந்நாளில் யானெடுத்த முயற்சியிலே
புதிதாக புதுமைபல பூத்திடவே வாழ்த்துங்களேன்
இறைநிலையின் திருவருளால் நிறைநிலையை அடைந்திடவே – தமிழ்த்
துறைசார்ந்த புனிதரெலாம் துணைநிற்க வேண்டுகிறேன்
அகமுணர்ந்த கருத்துகளை முகமலர எடுத்துரைப்பேன்
யுகங்கடந்தும் தமிழ்வாழ யூகித்து வாழ்த்திடுவேன்.
பா. விஜயின் படைப்புகளில்…. எனும் தலைப்பில்நல்
படைப்புகளை ஆய்ந்துசொல்ல பணிவோடு முயலுகின்றேன்.
கன்னல் மொழியெடுத்து ‘காகிதமரங்கள்’ செய்தவிதம்
இன்னும் முயன்று அழகுமரபு கவிதை ஆக்கும்திறம்
எண்ணம் உயர புதுமையினை எடுத்துச் சொன்னவிதம்
மின்னல் போன்று துடிப்புடன் சொல்லோவியம் படைத்தவிதம்
என்னென்பேன் உள்ளவண்ணம் சொல்லப்போனால்
உன்னதப் படைப்புகள் உயிர்கொண்டு வந்ததென்பேன்
சுந்தரத் தமிழினையே சுதந்திரமாய்த் தந்தவிதம் கண்டுகளிக்கின்றேன்
வந்தனம் தமிழா ! நின் தமிழினைத் தந்தனை நன்றே !
எந்தையும் தாயும் மகிழ்ந்த இத்திரு நாடு உனைக்கண்டு
விந்தை கொள்ளுமா ? வியப்பென்ன வியப்பு வித்தகக் கவியென்றால்
வித்தகக்கவியே ! நீ வெளியிட்ட புத்தகம் பலபயின்று
புத்தொளி பெற்றிட்ட எண்ணற்ற மானிடருள் யானும் ஒன்றென்பேன்
கத்தாழையாய் குளிர்ச்சி தரும் கருத்துகளை ஆய்ந்துதருவேன்
வித்தாரம் பேசுவோருக்கும் விருந்து பல படைத்திடுவேன்
தூய்மையான அறிவு துளங்கிட நற்கருத்துகளைப் படைத்து
தமிழ்த்தாயின் மேன்மை கூட்டுவேன் !
இன்னும் மென்மையாக்குவேன் யான் !!

மைதிலி ! என் தோழி


திறமை என்ற மூன்றெழுத்தில்
ஈற்றெழுத்தை முதலெழுத்தாக்கி
முதலெழுத்தைத் தொடரெழுத்தாக்கி
இடையின லகரமொடு இகரம் சேர்த்து
இறுதியிலிட்டால் அவள் பெயர் !

குணமோ தங்கம் ! மனமோ வைரம் !
கவிபாடும் குயில் ! இருகரம் பெற்ற மயில் !
இவள் சிந்துவதோ கிள்ளை மொழி
உள்ளமோ வெள்ளை வழி
இவள் இயல்பினைக் கண்ட அன்னம்
இவளே சிறந்தாளென எண்ணும் !

நூலறிவும், நுவலறிவும்
நுகர்ந்ததனால் நுவலுகின்றேன்
அகவையோ சிறிது ! ஆயின்
அவளறிவோ பெரிது!
தமிழ் கூறும் நல்லுலகில்
தன் பதிப்பை நிதம் பதிக்க
ஆதவன் போலவே வளர
ஒளி விளங்க - அகம் குளிர்ந்து
அடியேனும் வாழ்த்துகின்றேன் !

எவ்விடத்தும் எந்நிலையிலும்
உளம் நிறைந்த
உள்ளார்ந்த அன்பினையே – பரிசாய்
உவந்தளிப்பேன் ! யானும் பெற்றிடுவேன் !
விழைவிருந்தால் அன்பு
விண்ணையும் தாண்டி விளங்கட்டுமே !

நமக்கு வேண்டுவன

நோக்கம் ஒன்று வேண்டும் – அதை
நோக்கிப் போக வேண்டும் – அறிவில்
தேக்கம் ஒன்று வேண்டும் – கடமை
தேங்காதிருக்க வேண்டும் – அன்பு
பாக்கள் பாட வேண்டும் – நட்பு
பூக்கள் பூக்க வேண்டும் – தெய்வ
ஆசி கிடைக்க வேண்டும் – மனதில்
நேசம் நிலைக்க வேண்டும் !

வானம்

அந்தரத்தே விரிந்திருக்கும் அழகான கடல்
வந்தே பாய்ந்திருக்கும் வெண்மேக அலை
சந்திரனோ துடுப்பற்ற வட்டமான ஓடம்
சூரியனோ சுட்டெரிக்கும் சுதந்திர வெளிச்சம்
வந்துதித்த உடுக்கள் எலாம் உறுமீன்கள்
வானமெங்கும் இரைந்து கிடக்கும் அச்சிறுமீன்கள்
வானவூர்தி விரைந்து செல்லும் கப்பல்
ஜெட்வண்டி மேகம் மூழ்கும் கப்பல்
ராக்கெட்டோ எரிந்து செல்லும் கப்பல்
நீருக்குள்ளே நெருப்பு செல்லும் விந்தை
பாருக்குள்ளே கண்டு சொல்லும் உண்மை
வானில் மிதந்து செல்லும் சேட்டிலைட் எல்லாம்
கடலடியில் கிடைத்திருக்கும் வளமான வரமே
கடலடியிலும் விண்ணின் மேலேயும் இருபுறமும்
நீருக்குள்ளும் காற்றினுள்ளும் நீந்தத்தானே வேண்டும்
இருபுறத்தேயும் காணரும் செல்வங்கள் யாவும்
கண்டின்புறவும் கண்டுணரவும் ஆயிரமாயிரம் உண்டே !

Friday, March 20, 2009

சூரியனே !




சூரியனே !
சுட்டெரிக்கும் சுயம் நீ, சுதந்திர வெளிச்சம் நீ
ஆதிமுதல் அந்தம்வரை அத்தனைக்கும் காரணி நீ
அவதார புருஷர்களும் அடிபணியும் மூலமும் நீ
இயற்கையே ஆசான் என இயம்புகின்றார் பலரும்,
அவ்வியற்கையைப் படைத்தவன் நீ !
எவ்வுயிர்க்கும் காவலன் நீ !
பகலவனாய் நீ இருப்பதால் பகலிரவை யாமறிந்தோம்
பகட்டில்லாப் பரிதியும் நீ, பயன் கருதா பணியாளன் நீ
விருப்பு வெறுப்பின்றி வினையாற்றும் தூயோன் நீ
மொழியில்லா இலக்கியம் நீ ; மொழியாத கீதையும் நீ !
ஓயாத உழைப்பாளி, ஒளியான வழிகாட்டி
பேரண்டத்துள் உனக்கென ஓரண்டம் சமைத்தவன் நீ
தன்னேரில்லா தலைவன் நீ !
தன்மையிலோ ரோசக்காரன் !
ரோசமூட்ட கேட்பதுவோ சூடு இருக்கிறதா ? என்பதுதானே
உன்னத உக்கிரம் நீ !
உண்மையும் நீ, உயிரும் நீ, அறிவும் நீ, ஆற்றலும் நீ !
அகில உலகம் பெற்றிருக்கும் ஆகர்ஷன சக்தியும் நீ !
சாதனைகள் உனக்குச் சாதாரணம்
உழைப்புக்கு நீயே உதாரணம், - ஆம்
சுட்டெரிக்கும் சுயம் நீ ! சுதந்திர வெளிச்சம் நீ !!

“ இன்னும் ஒரு நாள்”

சில்லென்ற இதழெடுத்து மெல்லிய உடலெங்கும்
உச்சிமுதல் பாதம்வரை ஒத்தடம் இட்டுச்சென்றது
மெல்லிய பூங்காற்று !
உடலுக்குள் புத்துணர்வு ; உயிருக்குள் புத்துயிர்ப்பு :
நிலமகளும் மன மகிழ நிலவோடு கதிருதிக்க
புள்ளினம் சிறகசைக்க பூவினம் இதழ் விரிக்க
தென்றலோ மணம்பரப்ப அன்றிலென மனம் ஒன்ற
சுத்தமான காற்று, சத்தமற்ற சூழல்
பறவைகளின் பாடல், ஒளியுடன் இருள் ஊடல்
தெளிவுடன் ஒரு தேடல் !
புல்லின் நுனியிலும் மெல்லிய மணிமகுடம் சூட
வந்ததே விடியல் !
வந்தே தந்ததே இயற்கையின் மடியில்
இன்னும் ஒரு நாள் !

Tuesday, March 17, 2009

பேச்சுக் கலை

“ஆர்த்தசபை நூற்றொருவர்
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

- ஒளவையார்

உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர். ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பது ஒளவையின் கருத்து. ஆகவே பேசும்கலை என்பது பார்க்க எளியதாக இருப்பினும் அது ஓர் அரிய கலையே!
- நன்றி. முனைவர். உலகநாயகி பழனி அவர்கள்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்………”


அணுவாய்ப் பிறந்தோம் ; பலவாய்ப் பிரிந்தோம் ;
அண்டம் பலவும் அளந்தோம், கடந்தோம் ;
பல்லுயிராய்ப் பிறந்தோம் , பரிணாமம் அடைந்தோம் ;
தொல்லுலகம் முழுதும் தொடர்ந்தோம், தொடர்ந்தோம் !

இனிதாய் பல பிறவி எடுத்தும், முடித்தும்
இன்னுமோர் பிறவியை எய்துவதும் ஏனோ?
கனிவாய் நிறைவினைக் கண்ட பின்பு
முனிவினை நீங்கி முதல் நிலை பெறவே
துணிவுடன் செய்வோம் நல்வினைத் தொடர
பணிவுடன் பணிவோம் பதந்தனைத் தானே !!

‘தமிழ்ப்பா’


அன்னைத் தழிழே நீ என்பால்
கொண்டுள்ள அன்பால்
வழங்கினை ஐம்பால்

ஐம்பால் வழங்கிய அறிவால்
பொருட்ச் செறிவால்
உள விரிவால்

நும்பால் விளைந்த விழைவால்
பெரும் வியப்பால்
நுவல்வேன் யானும் ஒரு பா !!

Monday, March 16, 2009

என்னுள்ளே…….


என்னுள் சென்றே என்னை நானே எண்ணிப்பார்க்கின்றேன்!
எண்ணம் தன்னின் ஏற்றம் கண்டே என்னுள் ஆழ்கின்றேன்!
வண்ணவண்ண எண்ணங்களின் வலிமை காண்கின்றேன்!
வலிமையுடைய எண்ணங்களின் வசமே ஆகின்றேன்!

விண்ணில் மேவி விரிந்து விரிந்து வேகம் காண்கின்றேன்!
வானம், பூமி இவற்றை விஞ்சி விசாலம் ஆகின்றேன்!
எங்கும் நானே எதிலும் நானே என்னைப் பார்க்கின்றேன்!
எல்லாப் பொருளின் உள்ளும் புறமும் நானேயா கின்றேன்!

பச்சை வண்ணமதில் இச்சை கொண்டே நிதம் பரவிப் போகின்றேன்!
புவியின் மேனியைப் போர்த்திக் கிடக்கும் புல்வெளி யாகின்றேன்!
வனங்கள் எங்கும் அடர்ந்து கிடக்கும் மரங்களாகின்றேன்!
வானம் பூமி இரண்டையும் இணைக்கும் கணங்களாகின்றேன்!

உயிரினம் தோன்றிட உயர்வினைக் காட்டிட மலையாய் நிற்கின்றேன்!
உயிர்களின் தாகம் தீர்த்திட உவந்தே நீரருவியாய் வீழ்கின்றேன்!
அன்பெனும் தேனை அகத்தினில் சுமந்தே பூக்களாய் பூக்கின்றேன்!
அண்டம் எங்கும் ஆனந்தம் நிலவிட அன்பாய் உருக்கொண்டேன்!

வண்டினமாகி வையகமெங்கும் வாய்மை வாசிக்கின்றேன்!
தென்றலெனவே தேடும் உயிர்க்குள் சுவாசம் நேசிக்கின்றேன்!
கொண்டலெனவே குளிர்மலைத் தழுவி துளியாய் இறங்குகின்றேன்!
வானம் கொடுத்த காதற்ப் பரிசாய் புவியின் கரங்களில் விளங்குகின்றேன்!

சிந்தனை சிதைய சற்றே விழிகளைத் திறந்து பார்க்கின்றேன்!
வந்தது யாவும் வளப்பம் மிக்க கனவா என்கின்றேன்!
எண்ணம் மேவி என்னுள் ஆழ்ந்து இதுவரை கண்டதுபோல்
இயற்கையைப் போற்றி இனிதே வாழ எண்ணம் கொள்கின்றேன்!!