"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, August 30, 2009

மரம் வளர்ப்போம் ; நலம் பெறுவோம் !




மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.

சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :
தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! ‘மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலை’ என்ற வாசகம் நாம் அறிந்ததே அல்லவா! ஆம், மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும்.
எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!

மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. மேலும் கப்பல் கட்டுவதற்கும், மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்றன.

இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.. இவை நம் நாட்டின் செல்வங்கள். அக்காலத்தில் தாத்தா மரம் நட்டால் பேரன் பயனடைவான். இக்காலத்தில் மரத்தினை வைத்தவனே பயனையும் துய்க்க ஆசைப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை. விஞ்ஞானத்தினால் முடியாதது என்ன? செயற்கை உரங்களைச் சேர்த்து உடன் பயனெய்த வழிவகை செய்கிறோம். ஆனால் அதன் பயனும் நமக்கு குறைந்த அளவிலேயே நன்மை தருகின்றது என்பது வெள்ளிடை மலை அல்லவா? ஏன் இந்த அவசர கதி? மனிதனின் பொறுமை என்னவாயிற்று? நிதானம் எங்கே போயிற்று? நிதானம் பிரதானம் அல்லவா! எனவே எல்லோரும் இதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கையின் வழியில் செல்வோம்! மரங்களையும், பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம்! பயன் பெறுவோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்!!

5 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

துபாய் ராஜா said...

நல்லதொரு சமூகஅக்கறை கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்.

முருக.கவி said...

மிக்க நன்றிங்கண்ணா! தங்கள் வாழ்த்துக்களால் வளருவோம். மேலும் வாழ்த்துங்கள்.

முருக.கவி said...

மிக்க நன்றி திரு.துபாய் ராஜா அவர்களே!

mohanasundaram said...

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றான் அரசன்.
மரம் வளர்க்க நாங்கள் தயார்...
வீடு கொடுக்க நீ தயாரா... என்றான் ஒரு கவிஞன் அப்போது.

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் எனும்போது
எனை ஆளாக்க நீ தயாரா என்பானா?

மனிதனுக்கு மரம் சொல்லும் வேதம் புரியும்...
மரமனிதனுக்கு இது புரியுமா?

புரியவேண்டுமா?

ஈஷா யோகா போன்ற உன்னத வகுப்புகளுக்குச்செல்லுங்கள்...

அங்கு
மரம் மனிதனாவதை.
மனிதன் தெய்வமாவதை உணரலாம்.

மனிதனோடு மட்டுமல்ல
செடிகொடிகளோடும் பேசலாம்.
அவைகள் பேசுவதையும் கேட்கலாம்.

Post a Comment