"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Saturday, May 21, 2011

திருக்குறளும் திருமந்திரமும்

திருக்குறளும் திருமந்திரமும்

14.05.2011 மற்றும் 15.05.2011 ஆகிய இரு தினங்களில் ‘வளர்தமிழ் ஆய்வு மன்றம்’, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடத்திய எட்டாவது தேசிய கருத்தரங்கில் வழங்கிய கட்டுரை.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறு! (திருமந்திரம்: பாடல்-81)

முன்னுரை:

மக்கட் சமுதாயம் நலன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆதிகாலந்தொட்டு இக்காலம் வரை அங்ஙனமே இலக்கியங்கள் உருவாகின்றன. படைப்பாளனின் சிந்தனையில் கருவாகின்றன. அவ்வாறு உருவானவற்றுள் எக்காலத்திலும் மறுக்க முடியாத மாறாத உண்மைகள் நின்று நிலை பேறு கொள்கின்றன. அவற்றுள் தொன்மையானவை திருக்குறளும், திருமந்திரமும் ஆகும். இவ்விரு நூல்களிலும் கூறப்பட்டுள்ள ஆழமான கருத்துகளையும் அழகான ஒற்றுமைகளையும் இவண் சிறிது ஆராய்ந்து தெளிவோம்!

ஆசிரியர் தன்மை:

திருமூலர் பதினென் சித்தர்களுள் ஒருவராவார். இவரால் படைக்கப்பட்டது சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகக் கொண்டாடப்படும் ‘திருமந்திரம்’ ஆகும். இந்நூல் அறநெறிகளையும், ஞான, யோக மார்க்கங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திருமூலர், நந்தியம் பெருமானிடம் ஞான யோக மார்க்கங்களைக் கற்றுத் தேர்ந்த யோகியாவார். கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் பெற்றவர். திருவள்ளுவர் கி.மு. 31ஆம் ஆண்டு தோன்றியவர் என்றும், இவர் திருக்குறளை மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் கூறுவர். மயிலாப்பூரில் வாழ்ந்தவர். இவரது மனைவி வாசுகி அம்மையார் ஆவார். இருவரும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவரைப் பற்றி பிற செய்திகள் அறியவொண்ணாமலும், சில சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளன. திருமூலரும், திருவள்ளுவரும் வெவ்வேறு காலத்தவர்கள். ஆயினும் அவர்கள் படைத்த நூல்களில் கருத்தொற்றுமையை பல இடங்களில் காண முடிகின்றது. அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

கடவுள் வாழ்த்து:

முதற் குறளிலேயே வள்ளுவர் “ஆதிபகவன் முதற்றே உலகு”(குறள்-1) எனக் குறிப்பிடுவார். எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டமைந்ததைப் போல உலகமும் ஆதிபகவனை முதலாகக் கொண்டு அமைந்துள்ளது என்பார் வள்ளுவர். திருமூலரும் திருமந்திரத்தில் “ஆதி”, “பகவன்” எனத் தனித்தனியே சொல்லாட்சியைக் கையாண்டுள்ளார். மேலும் “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்” என்ற பாடலில் பகவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். கோயிலில் சென்று பகவனுக்குப் படைப்பது இறைவனைச் சென்று சேர்கிறதா? என்றால் அது நமக்குத் தெரியாது. ஆனால் “நடமாடக் கோயில் நம்மற்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவர்க்குத் தாமே” அதாவது நடமாடும் கோயில்களாக விளங்கும் மக்கட்கு உதவினால் அது இறைவனுக்கு உதவியதற்கு ஒப்பாகும். அச்செயல் இறைவனுக்குச் சென்று சேரும் எனக் குறிப்பிடுகின்றார். இது ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. “அகர முதல எழுத்தெல்லாம்...” (குறள்-1) என்ற குறட்பா அகர வடிவமானவன் இறைவன் என்று சொல்லும். இதனையே “ஆரும் அறியார் அகாரம் அவனென்று” என்று திருமந்திரம் பறைசாற்றும். “மலர்மிசை ஏகினான்” (குறள்-3) என்று குறள் இறைவனைப் போற்றும். திருமந்திரமோ “மலருறை மாதவன்” எனக் கொண்டாடும். இவ்வாறு கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இரு நூல்களும் பலவாறு ஒருமித்த கருத்துகளைக் கூறுவனவாய் அமைந்துள்ளன.

வான்சிறப்பு:

உலகம் நின்று நிலவ, எங்கும் எதையும் இயக்கும் ஓர் இயக்க ஒழுங்கு இறைநிலையாய்ப் போற்றப் பட்டாலும் உயிர்கள் தழைக்க உவந்து வளம் சுரக்கும் வான் மழையும் போற்றுதற்கு உரியது தானே! ஆம்! மழையின் சிறப்பையும் இன்றியமையாத தேவைகளையும் பற்றித் திருக்குறளும் திருமந்திரமும் இனிது எடுத்து மொழிகின்றன.

“வானின் றுலகம் வழங்கி வருதலான்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று” (குறள்-11) வானம் மழையைப் பொழிந்து தருவதால் தூய்மையான அம்மழை நீர் உலக உயிர்களைக் காக்கும் அமிழ்தம் போன்றது என வள்ளுவர் விளக்குவார். இதனையே திருமூலர் “அமிழ்தூறும் மாமழை” எனப் போற்றுவார். வான் மழையின்றேல் பூசைகள் இல்லையெனபதை “சிறப்பொடு பூசனை...” (குறள்-18) என்ற தொடரால் வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலர் “சிறப்போடு பூநீர்...” எனக் குறிப்பிட்டுள்ளார். வான் மழையின் சிறப்பை வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்களின் வாயிலாகத் தெரிவிப்பதைப் போலவே திருமூலரும்

“தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்,

தானே தடவரி தண்கடல் ஆமா” என்றும் “பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே” என்றும் பல பாவடிகளில் மழையின் சிறப்பினை உவந்து உரைக்கின்றார்.

நீத்தார் பெருமை:

நீத்தார் - துறந்தவர், துறவு பூண்டவர் எனப் பொருள் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் உலகம் நிலை பெற இறைவனும் மழையுமட்டுல்ல, துறவு ஒழுக்கம் பேணுபவர்களும் ஒரு காரணமாவர். மனிதப் பிறவியில் பிறந்தும் பிற உயிர்களைப் போலல்லாமல் உலக வாழ்வினைத் துறந்து பற்றற்று, உலக நலனைக் கருத்தில் கொண்டு வாழும் சான்றோர்களால் தான் உலகம் நல்ல வண்ணம் இயங்குகின்றது என்றால் அது மிகையாகாது.

வள்ளுவர் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். திருமூலரும் “இறப்பும் பிறப்பும் இருளையும் நீங்கி துறக்கும் தவங்கண்ட... அறப்பதி” என்று துறவறம் பூண்டவர்களைப் போற்றிப் பரவுகிறார்.

ஐம்புலன்களையும் மதம் கொண்ட யானைகளாக உருவகித்து அதனையடக்கும் அங்குசமாக அறிவினை உருவகிக்கின்றனர் திருவள்ளுவரும் திருமூலரும். எவ்வளவு பெரிய உண்மை. புலன்கள் ஒவ்வொன்றும் மதங்கொண்ட யானைக்குச் சமமானவை. அதனை நல்வழிப்படுத்த அறிவு எனும் அங்குசத்தைச் சரியான நேரத்தில் நாம் பயன்படுத்த வேண்டும். இன்றேல் புலன்கள் அடக்கமின்றி அலைபாய்ந்து நம் உயிர் சக்தியை வீணடித்து விடும். உயிர்ச் சக்தியை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உடலும் உள்ளமும் பொலிவு பெறும். இன்றேல் உயிர்ச்சக்தி குறைவானால் உடல், மனம் இரண்டுமே சோர்ந்து போகும். எனவே, விழிப்புணர்வுடன் செயலாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவினைப் பயன்படுத்தி புலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இதனையே, வள்ளுவர் “உரனென்னும் தோட்டியான் ஓரரைந்தும் காப்பான்” (குறள்-24) எனக் கூறுகிறார். திருமூலரும்

“முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” எனப் பாடுகிறார்.

அந்தணரின் இலக்கணம் பற்றி கூறுகையில்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்” (குறள்-30) எனக் குறளும்,

“அந்தணராவோர் அறுதொழில் பூண்டுளோர்

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ்செய்” எனத் திருமந்திரமும் உரைக்கின்றன.

இவ்வாறு புலன்களை அடக்கி அந்தணராய் நின்று துறவு பூணும் சான்றோர்களின் பெருமையை திருக்குறளும் திருமந்திரமும் பகர்கின்றன.

அறன் வலியுறுத்தல்:

திருவள்ளுவரும் திருமூலரும் அறச்செயல்களையே செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர். “சிறப்பீனும் செல்வமும் ஈனும்” (குறள்-31) எனும் குறட்பாவின் மூலம் அறவழியில் சென்று நேர்மையான முறையிலே பொருள் ஈட்டினால் அறம் அழியாத செல்வத்தையும் சிறப்பையும் தரும் என வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலரும்

“திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்

மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்” எனக் கூறுகின்றார். மேலும் இயன்றவரைக்கும் அறச்செயல்களைச் செய்யவேண்டும் என “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே” (குறள்-33) என்ற குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார். திருமூலரோ “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்ற பாடலின் வாயிலாக எளிமையான வகையில் அனைவரும் இயன்ற அளவிற்கு அறம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

அறமே அழியாத துணையாய் நிற்பதாகும். “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க” (குறள்-36) நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம், பிறிதொரு நாள் தருமம் செய்யலாம் என எண்ணி ஒதுக்கி வைக்காமல் உயிருள்ளளவும் அறவழியில் தான தருமங்களைச் செய்ய வேண்டும். ‘பிறப்பும் இறப்பும் அவன் கையிலே! நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே!’ என்று இக்காலக் கவிஞன் கூடக் குறிப்பிடுவான். இக்கருத்தினையே திருமூலரும், இறக்கும் தருவாயில் எவரும் உடன் வரார். அறமே, தர்மமே தலைக் காத்து நிற்கும் என்ற கருத்தினை “பண்டம் பெய்கூரை...” என்ற பாடலின் வாயிலாக வலியுறுத்துகின்றார். மேலும் ஒருவன் தன் வாழும் காலத்தை வீணடிக்காமல் தொடர்ந்து இயன்ற அளவு தருமம் செய்து வந்தால் அதனால் விளையக் கூடிய அறமானது, அவனுக்கு பிறவி மீண்டும் தோன்றாமலிருக்க அதன் வழியை அடைக்கும் கல்லாக இருக்குமென திருவள்ளுவரும் திருமூலரும் விளக்குகின்றனர். எவ்வாறெனில்,

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்”(குறள்-38)எனக் குறட்பாவும்,

“வாழ்நாள் அடைக்கும் வழியது வாமே!” எனத் திருமந்திரமும் எடுத்துரைக்கின்றன.

மனிதன் தான் எதற்காக பிறவி எடுத்தோம், எதனைச் செய்து முடிக்க வந்தோம் என்பதை அகநோக்காகக் கொண்டு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டி தன் பிறவியைக் கழிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து தம் வாழ்நாள் முழுக்க அறம் செய்வதனால் மீண்டும் பிறவாமையைப் பெற முடியும் என்று இரு நூல்களும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இல்வாழ்க்கை:

இல்வாழ்க்கை செய்பவனுக்கு உரிய கடமைகளை வரிசைப்படுத்தி,

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் -தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(குறள்-43) என வள்ளுவர் கூறுகிறார். இல்வாழ்க்கையில் வாழ்பவன் ஒருவனது கடமைகளாவன:

தம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய நியமங்களைச் சரியாகச் செய்து தான தருமங்களை செய்ய வேண்டும். இதுவே முதற் கடமையாகும்.

அடுத்து தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட வேண்டும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக இல்லம் தேடி வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு, உள்ள விருப்பத்தோடு வரவேற்றுப் போற்ற வேண்டும்.

நான்காவதாக உற்றார், உறவினர்களைக் காத்தல் வேண்டும்.

ஐந்தாவதாக தன் பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்றும் தமக்குத் தேவையானவற்றையும் நன் முறையில் பொருள் ஈட்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.

ஆறாவதாக, அரசனுக்கு இறை செலுத்த வேண்டும்.

இவையாவும் இல்வாழ்பவனது கடமைகளாக வள்ளுவர் வரிசைபடுத்துகிறார்.

இக்கருத்தினையே திருமூலரும், “திறந்தரு முத்தியும்...” எனத் தொடங்கி “அறைந்திடல் வேந்தனுக்கு ஆறில் ஒன்றாமே!” என முடியும் பாடலின் வாயிலாகக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தனி மனிதனும் இத்தகு பொறுப்பினை பெற்றுள்ளான். பொறுப்புணர்ந்து நடப்பவர் எண்ணிக்கை அதிகமானால் சமுதாயம் மேம்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

விருந்தோம்பல்:

விருந்தோம்பல் முறையை நமக்கு விளக்கிட முனைந்த வள்ளுவர்,

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு”(குறள்-86) என மொழிந்துள்ளார். வந்த விருந்தினர் உணவு உண்டு செல்ல, இனி விருந்தினராக யார் வருவார்கள் என எதிர்ப்பார்த்துக் காத்திருப்பவன் தேவர் உலகத்தில் மிகச் சிறந்த விருந்தினராகப் போற்றப்படுவான் என்று விருந்து போற்றுபவனின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார்.

இக்கருத்தையே திருமூலர் “பார்த்திருந்து உண்பின்” எனப் பகர்கின்றார்.

விருந்து போற்றுகின்றோமானால் அது சிறந்தது. ஆனால் அதன் சிறப்பு, விருந்தினரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். விருந்துண்பவர் நன்மக்களாயின் நற்பயன் விளையும், தீக்குணத்தோராயின் தீமையே விளையும். இக்கருத்தினை,

“இணைத்துணைத் தென்ப தொன்றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்”(குறள்-87)என்கிறது குறள்.

நல்லவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘பாத்திரம்’ என்றும் தீயவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘அபாத்திரம்’ என்றும் திருமந்திரம் விளக்கம் தரும். பாத்திரம் என்பது எள்ளளவேனும் சிவஞானியருக்கு அளித்தால் சித்தி, முத்தி, போகம் கிடைக்கும். யோகம், இயமம், நியமம் முதலியவற்றை அறிந்தவர்களுக்குத்தான் உதவுதல் வேண்டும். குருபூசை, மகேசுவர பூசை என்ற தலைப்பில் உள்ள திருமந்திரப் பாடல்கள் சிவனடியார்க்கு உணவு வழங்குவதை உயர்வாகக் கூறுகின்றன. துறவிகளுக்கு உணவு வழங்குதல் சிறப்பானது என்கிறது திருமந்திரம்.

அபாத்திரம் என்பது எவ்வளவு தான் மூடர்களுக்கு அளித்தாலும் அதனால் பலனொன்றும் இல்லை. மறுமை இன்பம் வாய்க்காது. இறைவனை வழிபடாதவருக்குக் கொடுப்பவரும், ஏற்பவரும் நரகம் புகுவர் எனத் திருமந்திரம் விளக்கம் தரும்.

நம் முன்னோர்கள் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ எனக் கூறுவர். அக்கருத்தை ஒட்டியே திருமூலரும் திருவள்ளுவரும் உரைக்கின்றனர்.

நல்ல பக்குவமடைந்த, சித்தத் தெளிவு கொண்டோர் உணவு சமைத்தால் அத்தன்மையே உணவு உட்கொள்வோருக்கும் வரும். பக்குவமற்றவர் உணவு தயாரித்தால் அத்தன்மையையே உணவு உட்கொள்பவரும் பெறுவார் _ மகாபாரதக் கிளைக்கதை ஒன்று இதனை விளக்குவதாய் அமையும். எனவே நல்ல தன்மைகளை நாமும் வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்ல தன்மை உடையவரின் நலனை விரும்பிக் காக்க வேண்டும். நல்லோருடன் நட்புக் கொள்தல் வேண்டும். இக்கருத்தை ‘நல்லினம் சாரல், நயன் உணர்தல்’ எனும் இன்னிலை பாடல் மூலம் உணரலாம்.

முடிவுரை:

நலன் பயக்கும் கருத்துகளை திருக்குறளும் திருமந்திரமும் தெவிட்டாமல் தருகின்றன. இலக்கிய சுவை உணர்ந்து நாம் நம் வாழ்க்கையின் இலக்குகளை நிர்ணயிப்போம். திருவள்ளுவரின் கருத்துகளைத் திருமூலர் எடுத்தாண்டாரா அல்லது திருமூலரின் கருத்துகளை வள்ளுவர் கையாண்டாரா என்ற வினாவிற்கு விடையில்லை. இருப்பினும் பெருந்தகை சான்ற அவ்விருவர் கருத்துகளையும் செவிமடுத்து நல்ல வண்ணம் வாழவேண்டியது நம் கடமையாகும். தனிமனித ஒழுக்கம் பேணப்படவேண்டும். கல்வியை அனைவரும் முறையாகப் பெறவேண்டும். அனைவரும் உழைத்துப் பொருளீட்டி அறவழியில் நின்று பிறவிப்பயன் பெறவேண்டும். வேண்டுவது விழைவதாக! வேண்டுவது விளைவதாகட்டும்!!

நலமே நிறைக! தமிழே வளர்க!!

இலக்கிய ஆளுமைகள்

31.03.2011 அன்று சென்னை கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற “பன்முக நோக்கில் தமிழ்” எனும் தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு வழங்கிய கட்டுரை.

முன்னுரை:

‘இலக்கியம்’ என்பது மக்களுக்கு நல்ல இலக்குகளை இயம்புவதாகும். காலந்தோறும் தன் வடிவத்தில் மாறுதல் எய்துவது இலக்கியத்தின் இயல்பு. சம காலத்தில் நிகழும் நிகழ்வுகள் சுற்றுச்சூழல்கள் நம்முள் ஏற்படுத்தும் எண்ணங்களின் விளைவாய் அமைபவைதான் இலக்கியங்கள். இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவடிவம் புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை எனச் சொல்லலாம். இன்னும் புதினம், நாவல், சிறுகதை, பக்கக்கதை, பத்திக்கதை என பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் சிறப்பு பெறுவது என்னவோ சிந்திக்க வைக்கும் படைப்புகள்தாம்.

எது கவிதை?

புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை. உள்ளத்து உணர்வுகளை உள்ள வண்ணம் படிப்பவரின் உள்ளத்தின் உள்ளே உணரச் செய்வது கவிதை எனலாம்.

“பூ தாவரத்தின் சாரம்; அதன் பரிணாம உச்சம்

தேன் பூவின் சாரம், அதன் ரகசியம்” என்று கவிக்கோ அவர்கள் கவிஞனும் தேனீயும் ஒன்று என்கிறார்.

தேனீ ஈக்களின் வகைகளுள் ஒன்றாயினும் தேனாகிய உயர்ந்த பொருளையே தேடி ஓடும். அதனைப் போல கவிஞனும் உயர்ந்த பொருளினையே நாடவேண்டும். அதுதான் கவிதை. தேனீ அழகுணர்ச்சி உடையது, கவிஞனும் அழகுணர்ச்சிக்கு ஆட்பட்டவனாவான்! தேனீக்கள் தேடிச் சேகரித்த தேனில் பூக்களின் முகவரி இல்லை, பொதுமைத் தன்மைதானுண்டு. அதுபோல கவிஞனின் கவிதையிலும் பொதுமைத் தன்மையே காணப்படவேண்டும். அதுவே சிறந்த பண்பாகும்.

தேன் ஒரு உணவு கவிதையும் உணவாகும்!

தேன் ஒரு மருந்து கவிதையும் மருந்தாகும்!

தேன் அழியாத தன்மை உடையது, கவிதையும் அழியாத தன்மையைப் பெறவேண்டும்.

மலர் மடிந்து விடும், மது மடிவதில்லை. கவிஞன் மறைந்திடினும் கவிதை மறைவதில்லை.

அங்ஙனம் அழியாத பல கவிதைகளைப் படைத்துத் தருபவர்களே கவிஞர்கள் வரிசையில் வலம் வருகின்றனர். இவ்விலக்கியத்தில் இக்காலக்கவிஞரின் ஆளுமைகளை இவண் காணவேண்டும்.

பா.விஜய்:

20-ம் நூற்றாண்டில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றோர் வரிசையில், எழுத்துலகில் தோன்றிய இன்னுமொறு சூரியன் பா.விஜய் ஆவார். இவரது ஆளுமை தனித்தன்மை வாய்ந்தது. பல விதமான தோல்விகளைச் சந்தித்து சந்தித்து, சாதனைக்குப் பாலம் அமைத்து, அதிலே பயணப்பட்டு ‘வித்தக கவி’ என்னும் பட்டமும் பெற்றவர். பா.விஜய் படைப்பாளராகப் பன்முகங்களைக் கொண்டவராகத் தோன்றுகிறார். கவிதை, மரபு கவிதை, நாவல், பாடல், வசனம், நடிப்பு எனப் பல்வேறு முகங்களைக் கொண்டவர் கவிஞர். அதற்கு முன்னதாக ஆளுமை என்பதனை சிறிது ஆய்ந்து தெளிவோம்.

ஆளுமை:

“பிறரைக் காட்டிலும் குறிப்பிட்ட பண்பிலோ, திறனிலோ மிகச் சிறந்து விளங்குபவனை சிறந்த ஆளுமையுடயவன்” என்கிறோம். “ஒரு மனிதன் தன் பாரம்பரியத்தினாலும், சூழ்நிலையினாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மனப்போக்குகள், உளத்துடிப்புகள், செய்முறைகள், உடல் வேட்கைகள் மற்றும் இயல்பூக்கம் ஆகியவற்றின் தொகுப்பே அவனது ஆளுமையாகும்” என்று உட்வொர்த் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு வெளிப்படக்கூடிய ஆளுமைத்திறனானது கவிஞனுக்குக் கவிஞன், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதாய் அமைகிறது. இவண் பா.விஜய்யின் படைப்புகளில் ஆளுமைத் திறன் அமைந்துள்ள விதத்தைக் காணலாம்.

சிந்தனைச் சிற்பி:

கவிஞர்கள் ஒவ்வொருவரும் சிந்தனைச் சிற்பிகள் தாம். நம் கவிஞர் எவ்வகையில் தம் சிந்தனையில் மாறுபடுகிறார்? கருத்தினுள் ஒரு கருத்தைப் புகுத்த முதலில் வினா எழுப்பி சிந்திக்க வைத்துப் பின் விடையைப் பகர்கிறார். இங்ஙனம் பல கருத்துகள் விளக்கப் பட்டுள்ளன. சான்றாக ஒன்று ..

“அருவி என்பது

ஆற்றை நோக்கிப் போகிறது

ஆறு என்பது

கடலை நோக்கிப் போகிறது

கடல் என்பது எதை நோக்கி?

கடலுக்குப் பயணம் இல்லையா?

கடல் என்பது ஒரு துளியினுடைய பயணத்தின் முடிவா?

கடல் என்பது

இயக்கமில்லாத இடமா? இல்லை!

கடலுக்கும் பயணமுண்டு!

அருவியாய் ஆறாய் நடந்து வந்த துளி-

கடலில் சென்று முடிந்து விடுவதில்லை!

பக்தியைப் போல

காதலைப் போல

அந்தப் பயணம் தொடர்கிறது!

கடல் என்பது

நிற்கும் நீரல்ல! புதுப்பிக்கப்படும் நீர்!

ஒரு கட்டத்திற்கு மேல்

கடலும், பக்தியும், காதலும்

கண்ணுக்குத் தெரியாத பயணத்தில் இருக்கிறது!

கடல் எப்படிப் பயணம் செய்கிறது?

மேல் நோக்கி, நீராவியாய் மேல்நோக்கி

வானத்தை நோக்கி மேகத்தை ஆக்கி.

கடல் போல் ஒரு பயணம்……

இவ்வாறு நம் சிந்தனைக்குக் கருத்துகளைச் சீராய் வழங்குகிறார். ஒரு ஆசிரியர் போல சின்ன சின்ன வினாக்களை எழுப்பி எளிமையான முறையிலே சிந்திக்க வைப்பதுதான் சிறப்பு. கவிஞர் இவ்விதம் தம் கருத்துகளை கவிதைகளில் அழகாக ஆளுகிறார். இங்ஙனம் தம் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தந்திர தினவிழா:

பா.விஜய் தனது அடுத்த அக்னிப் பிரவேசம் என்னும் நூலில் முதற் கவிதையாய் (சு)தந்திர தினவிழா என்ற ஒன்றினைப் படைத்துள்ளார். கவிஞர் சிறு வயது முதல் சுதந்திர தின விழாவைப் பார்த்து வருகிறார். ஆயின் பல வருடங்களாக பல விழாக்கள் போகின்றனவே தவிர சமுதாயத்தில் பெரியதாக எந்த மாற்றத்தையும் அது ஏற்படுத்தவே இல்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறார். சமூக அக்கறையுடைய ஒரு இந்தியனாய், ஒரு தமிழனாய்த் தன் மன உணர்வுகளைச் (சு)தந்திர தின விழா என்னும் கவிதையில் வடிவமைத்துக் காட்டுகிறார் கவிஞர். சுதந்திர விழாவை தந்திர விழா எனத் திருத்தி எழுதுவோம் எனக் கூறுகிறார். நாகத்திற்கு நல்ல பாம்பென்று பெயர் சூட்டியிருப்பதால் ஏதோ ஒன்றுக்கு என்னவோ ஒரு பெயர்! எனச் சாடுகிறார் கவிஞர்.

“இங்கே ஒவ்வொரு முறையும்

விழா போகிறதே தவிர

ஒவ்வொரு விழாவும்

ஒட்டடை அடிக்கப் போய்

ஓடு மாற்றிய கதையாய்

ஒரே மாதிரிதான் போகிறது”. எனச் சலித்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதன் மூலம் மறந்தவற்றை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளக் கூடிய நிர்பந்தம்தான் என்கிறார். இவ்விழா கொண்டாடாவிட்டால் மக்கள் அத்தனையும் மறந்தே போவர் என்கிறார் கவிஞர். ஒரு கொடியேற்றுபவருக்கு வழங்கப்படும் கௌரவம் கூட இந்தக் கொடிகளுக்கு வழங்கப்படவில்லையே அதுதான் வேதனை என்கிறார். இந்தப் பேச்சாளர்கள் பேசுவதோடு நிறுத்திவிடுகிறார்களே, சுதந்திரப் பொன்விழாக் கண்டும் பொறுப்பினைப் பலரும் பெறவில்லையே! உண்மையான நாட்டுப்பற்றின் உணர்வை யாரும் பெறவில்லையே! பகுத்தறிவு படரவேயில்லையே! சுதந்திரத்தன்று சூளுரைப்பவர்கள் யாரும் சாகவில்லை. ஆனால் சுதந்திரம் செத்துவிட்டதெனக் கவிஞர் குமுறுகிறார். இக்கவிதையில் பா.விஜய்யின் நாட்டுப்பற்றினை நன்கு நாம் உணர முடிகிறது. ஒரு உண்மையான கவிஞன் சுயமரியாதைக்காரன் என அவரே சுட்டிக் காட்டியுள்ளார். பா.விஜய் தன் படைப்பின் மூலம் தன் உள்ள உணர்வின் ஆளுமையை நன்கு வெளிப்படுதியுள்ளார்.

வரலாற்று நிகழ்வுகளின் பின்னனியில்:

பொதுவாக மனிதர்கள் வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள சான்றாக அமைந்த ஆவணங்கள், கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றவற்றை நாடி விளங்கிக் கொள்வர். நமது கவிஞர் மாற்றி யோசிக்கிறார். வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சிகளை நிலை நிறுத்த எத்தனை பேர் தன்னுடைய உயிரையே தியாகம் செய்துள்ளனர், நிழலுக்குப் பின்னால் எத்தனை நிஜங்கள் நிழலாகிவிட்டன. நிலையான நிஜங்களுக்குப் பின்னால் நிழலாகிப் போன நிஜங்கள் எத்தனை எத்தனை? இவற்றை “உடைந்த நிலாக்கள்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள நூலில் பல கவிதைகளின் வாயிலாக வெளியிட்டுள்ளார் கவிஞர். “உடைந்த நிலாக்கள்” பாகம்-2ன் முகப்பு உரையில் பா.விஜய் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதோ இனி உங்கள் களம்!

சரித்திரம் சார்ந்த காதலின் வேர் முனையில்

இருந்து வழியும் நிஜத்தின் தேன் பருக

உங்கள் பட்டாம்பூச்சி கண்கள் பயணப்படட்டும்”

‘நிஜமென்னும் தேன் பருக, பட்டாம்பூச்சிக் கண்கள் பயணப்படட்டும்’ என்பதில் என்ன ஒரு அழகான கற்பனை! இவ்வாறு பா.விஜய் தனது ரசனையை இங்கு பதிவு செய்துள்ளார்.

நமக்கெல்லாம், மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார் என்பது வரைதான் தெரியும். ஆனால் தாஜ்மகாலின் மாதிரியை வடிவமைக்க கலைஞன் ஒருவன் தன் உயிரையும், காதலியையும் விலையாகக் கொடுத்தான் என்ற செய்தியைக் கற்பனை கலந்து மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். பல விதமான கலைஞர்களின் உள்ள காதலின் தன்மையைக் கற்பனை கலந்து மிக அற்புதமாக கவிதைகளாகக் கட்டமைத்து உள்ளார் கவிஞர். காதல் என்ற ஒரு உணர்வுக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்! அத்தனையும் பா.விஜய் தம் படைப்புகளில் வடிவமைத்துள்ளார் என்றால் அது மிகையில்லை.

அறிவியல் செய்திகள்:

பா.விஜய் கவிதைகளை வழங்கும் கலையுணர்வு மிக்க கலைஞர் மட்டுமல்ல. தமது கவிதைகளில் காதல், வீரம், சிறப்பு இதனை மட்டும் சொல்லவில்லை. வரலாற்று நிகழ்வுகளின் பின்னனி, இயற்கை வருணனைகள், பொது அறிவு முதல் அறிவியல் செய்திகள், இசை மற்றும் கணக்குகள் கூடக் கொடுத்துள்ளார். சான்றாக சில.

“கண்ணாடி என்பது என்ன?

சிலிகான் என்ற உலோகத்தை

நீர் நிலையில் இருத்தி

1600 டிகிரி வெப்பத்தில் உறைய வைக்கையில்

கண்ணாடி உருவாகிறது.

கண்ணாடி என்பது

உறைநிலையில் உள்ள தண்ணீர்!

ஆத்திரம் என்பது என்ன?

அவமானம் என்ற உலோகத்தை

மனநிலையில் இருத்திக்

கோப வெப்பத்தால் உறைய வைக்கையில்

ஆத்திரம் உருவாகிறது!

ஆத்திரம் என்பது

உறைநிலையில் உள்ள அவமானம்!”

ஒரு மனிதன் அவமானம் அடைவதினால் ஆத்திரம் கொள்கிறான். கவிஞர் மனிதனின் மன உணர்வினுக்கு அறிவியல் சார்ந்த உவமை கூறி விளக்குகின்றார். அது மட்டுமா,

ஒரு ஆணுடைய கோபம் தீ!

தண்ணீர் ஊற்றினால் அணைந்து விடும்!

ஒரு பெண்ணுடைய கோபம் கந்தகம்!

அணையாது!

கோப உணர்வினை விமர்சிக்கின்ற கவிஞர், தீ தண்ணீர் ஊற்றினால் அணைந்துவிடும், ஆனால் கந்தகம் அணையாது! என்ற அறிவியல் சார்ந்த எடுத்துக் காட்டினை வழங்குகிறார். மேலும் பொதுவான தத்துவார்த்தங்களையும் கவிஞரின் படைப்புகளில் காணமுடிகிறது.

“பிரம்மாண்டமானதும்

பிரம்மாண்டமானவர்களும்

உடைந்து போவது தன்னாலேயேதான்!

ஒரு பெரிய கப்பலை உடைக்கிறது

ஒரு சிறிய கடற் பாறை! இல்லை!

சென்ற வேகத்தில் கப்பல் பாறையில் மோதி

தன்னைத் தானே உடைத்துக் கொள்கிறது!”

மேற்கண்ட கருத்து ‘நன்மையும் தீமையும் பிறர் தர வாரா’ எனும் முதுமொழியை ஒட்டியே உள்ளது.

‘மனிதனை விட மகான்களைக் கண்டுணரும் சக்தி மிருகங்களுக்கு அதிகம்! என்றும் பொது செய்திகளையும் ஏராளமாகச் சொல்லிச் செல்கிறார் கவிஞர்.

உச்சக்கட்டம்:

“கவிதை! உச்சக் கட்டத்திற்குப்

போகும்போது எளிமையாகிவிடும்!

இசை! உச்சக் கட்டத்திற்குப்

போகும்போது கண்ணீராகி விடும்!

காதல்! உச்சக் கட்டத்திற்குப்

போகும்போது ரூபமற்றதாகி விடும்!”

இது போன்று எளிமையாக அரிதான கருத்துகளைச் சொல்லிச் செல்கிறார் கவிஞர்.

விலங்கியல்:

“பசித்தாலும் புலி புல் தின்னாது!

ஆம்! பசித்தால் புலி புல் தின்னாதுதான்!

ஆனால் பசிக்கவே இல்லையேல் புலி புல் தின்னும்!

இது விலங்கியல் அதிசயம்!”

புலிக்கு பசியெடுக்கவில்லையேல் அதன் காரணம் அஜீரணம்! அஜீரணம் போக்கும் சூரணம்தான் புல்! புல் ஒரு மூலிகை! புலிக்கும் புல்லின் சக்தி புரியும்! அதனால் புலி புல் தின்னும்! என்று விலங்கியல் தத்துவம் உரைக்கிறார் கவிஞர்.

பன்முகச் சிந்தனை:

“காதலில் சிற்றின்பம் வந்து

கலக்கும்போது முழுமை அடைகிறது!

காதலில் பேரின்பம் வந்து

கலக்கும் போது பெருமை அடைகிறது! என்று காதலோடு இல்லறம் புகுந்தால் சிற்றின்பம், துறவறம் புகுந்தால் பேரின்பம். பேரின்பத்தில் காதல் பக்தியாகி பரிணமிக்கும் என்பதை உணர்த்துகிறார் கவிஞர்.

வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல, பா.விஜய் பூகோளமும் அறிந்தவர்தான். சான்றாக,

“ஒரு கடலுக்குள்

இரண்டு கண்டங்களை இணைக்கும்

எரிமலைகள் பதுங்கி இருப்பதைப் போல

ஒரு பெண்ணுக்குள் இரண்டு மதங்களை இணைக்கும்

காதல் மலை ஒளிந்து இருந்தது..” என்று காதலினால் மதம், இனம், நிறம், மொழி அனைத்தையும்வெல்ல முடியுமென்பதை உணர்த்த வந்த கவிஞர் பூகோள-புவியியல் கருத்துகளை உவமையாகுகிறார்.

“அதிகமாக ஜெயித்தவர்களும் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள்!

அதிகமாகக் காதலிப்பவர்களும் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள்!

அடடா! காதல் நாத்திகனுக்குக் கூட கடவுளாகி விடுகிறதோ?

மேற்கண்ட வரிகளில் காதல் தெய்வீகமானது என்று கவிஞர் கூறுகிறார்.

“மனம் என்பது உணர்ச்சி வகுப்பு!

அறிவு என்பது பயிற்சி வகுப்பு !

மனம் சொல்வதை அறிவு கேட்டால் சுயநலம்!

அறிவு சொல்வதை மனம் கேட்டால் பொது நலம்!”

என்று சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் இலக்கணம் படைக்கிறார் பா.விஜய்.

“ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானது என்றால்

ஒவ்வொறு அணுவையுமே ஆயுதமாகக் கொண்ட ஒரு மனிதன்

எத்தகையவன்! அந்த மனிதன் தான் அலெக்ஸாண்டர்!”

இவ்வாறு அறிவியல் செய்தியை உவமையாக்கிக் கையாண்டுள்ளார் பா.விஜய்.

“உயிர் விலை மதிப்பற்றது!

அது இழப்பது தேசத்திற்காக மட்டுமே

இருக்க வேண்டும்!” இவ்வரிகள் நாட்டுப்பற்றை ஊட்டுவதாய் அமைகின்றது.

“வெற்றி என்பது செயல்படுதலில் இல்லை

திட்டமிடுதலில் தான் இருக்கிறது!.....” என்று திட்ட மேலாண்மையைச் சுட்டுகிறார்.

“கலைஞனயும் வீரனையும்

பொருட்படுத்தாவிட்டால்

பெருங்கோபம் வரும்” என்று கலைஞனின் நிலையை விளக்குகிறார்.

“அன்பின் கண்களுக்கு

அஃறிணையும் உயர்திணைதான்”. இவ்வரிகள் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்னும் பாரதியின் வரிகளை நம்க்கு உணர்த்துகின்றன.

“வீரர்கள் வீழ்வது இன்னொரு வீரனால் அல்ல!

பக்கத்தில் இருக்கும் துரோகத்தால்

அந்தத் துரோகம் தொடர்கிறது இன்றுவரை.” என்ற வரிகள் மக்களிடையே மனங்களில் எழும் துரோக உணர்வினைச் சுட்டுகின்றன.

முடிவுரை:

இங்ஙனம், கவிஞர் தாம் படைத்துள்ள படைப்புகளில் பல் வகையான செய்திகளைக் கலந்து சுவை பட இலக்கியம் அமைத்துள்ளார். இவ்விலக்கியங்களில் வித்தக கவிஞர் பா.விஜய்யின் ஆளுமைகளை அவர் வடிவமைத்த கதாப்பாத்திரங்கள் கற்பனைகள், வரலாற்றுத் தேடல்களால் விளைந்த புதினங்கள் மற்றும் அறிவியல், புவியியல், பொதுவியல் போன்ற செய்திகளைப் படைத்த பாங்குகளின் மூலம் அறிய இயலுகின்றது.

ஆளுமையைப் பொறுத்தவரை அறிஞர் ஆல்போர்ட் முன்மொழிந்த வரையறையே மிகவும் சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றது. இவரது கூற்றுப்படி ‘ஒவ்வொரு மனிதனிடமும் குறிப்பிட்ட ஒரு வகையில் அவனது உடல் மனப்பண்புகள் சேர்ந்து ஒருங்கமைந்து இருக்கும். இவ்வொருங்கமைப்பின் இயல்பு மனிதனுக்கு மனிதன் சிறிதேனும் மாறுபட்டிருக்கும். தனி மனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறான் என்பது இவ்வொருங்கமைப்பின் தன்மையைப் பொறுத்ததாகும். இத்தகைய உடல், மனப் பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு ஒருவனது ஆளுமையாகும்”. பா.விஜய் அவர்களின் படைப்புகளின் வாயிலாக அவரது ஆளுமையை நாம் நன்கு உணர முடிகிறது.