"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Monday, March 16, 2009

என்னுள்ளே…….


என்னுள் சென்றே என்னை நானே எண்ணிப்பார்க்கின்றேன்!
எண்ணம் தன்னின் ஏற்றம் கண்டே என்னுள் ஆழ்கின்றேன்!
வண்ணவண்ண எண்ணங்களின் வலிமை காண்கின்றேன்!
வலிமையுடைய எண்ணங்களின் வசமே ஆகின்றேன்!

விண்ணில் மேவி விரிந்து விரிந்து வேகம் காண்கின்றேன்!
வானம், பூமி இவற்றை விஞ்சி விசாலம் ஆகின்றேன்!
எங்கும் நானே எதிலும் நானே என்னைப் பார்க்கின்றேன்!
எல்லாப் பொருளின் உள்ளும் புறமும் நானேயா கின்றேன்!

பச்சை வண்ணமதில் இச்சை கொண்டே நிதம் பரவிப் போகின்றேன்!
புவியின் மேனியைப் போர்த்திக் கிடக்கும் புல்வெளி யாகின்றேன்!
வனங்கள் எங்கும் அடர்ந்து கிடக்கும் மரங்களாகின்றேன்!
வானம் பூமி இரண்டையும் இணைக்கும் கணங்களாகின்றேன்!

உயிரினம் தோன்றிட உயர்வினைக் காட்டிட மலையாய் நிற்கின்றேன்!
உயிர்களின் தாகம் தீர்த்திட உவந்தே நீரருவியாய் வீழ்கின்றேன்!
அன்பெனும் தேனை அகத்தினில் சுமந்தே பூக்களாய் பூக்கின்றேன்!
அண்டம் எங்கும் ஆனந்தம் நிலவிட அன்பாய் உருக்கொண்டேன்!

வண்டினமாகி வையகமெங்கும் வாய்மை வாசிக்கின்றேன்!
தென்றலெனவே தேடும் உயிர்க்குள் சுவாசம் நேசிக்கின்றேன்!
கொண்டலெனவே குளிர்மலைத் தழுவி துளியாய் இறங்குகின்றேன்!
வானம் கொடுத்த காதற்ப் பரிசாய் புவியின் கரங்களில் விளங்குகின்றேன்!

சிந்தனை சிதைய சற்றே விழிகளைத் திறந்து பார்க்கின்றேன்!
வந்தது யாவும் வளப்பம் மிக்க கனவா என்கின்றேன்!
எண்ணம் மேவி என்னுள் ஆழ்ந்து இதுவரை கண்டதுபோல்
இயற்கையைப் போற்றி இனிதே வாழ எண்ணம் கொள்கின்றேன்!!

3 comments:

mohanasundaram said...

கனவது கனிந்து நனவதுவாக
கரங்கள் குவிக்கின்றேன்....

இனி வருங்காலம் இளைஞர்கள் மனதில்
இவ்வெண்ணம் பதிந்திட்டால்
நனிபுகழ் உலகம்
தோன்றுவ திண்ணம்
நம்பிக்கை வைத்திடுவோம்...

மனமது செம்மை மந்திரம் செம்மை
எனவரும் காலம்
வருங்காலமாகட்டும்....

நம்மனற்கேணி அன்பெனும்
ஊற்றை அனுதினம் சுரக்கட்டும்...

mohanasundaram said...

http://groups.google.sm/group/annamalaieasan/tree/browse_frm/month/2007-12/3469c2d7f601afe6?rnum=21&lnk=nl

*செவ்வாய் !!!*


முதலில் தொடங்கி முடிவில் முடியும் செவ்வாய்க் கதையிங்கு யானும் சொல்வேன்!


அன்னையின் வயிற்றினில் அமைதியாய் உறங்கி
உண்மையை உணர்ந்திடும் ஆசையின் வழியே
இன்பமும் துன்பமும் யாமுணர்ந் திடவே
மன்னும் உலகினில் வந்து வீழ்ந்ததும்
சுவாசம் இழுத்திட வழியெதுவெனவே
திகைப்பினில் பவள வாயினைத் திறந்தே
முதலாம் முதலாய் ஆங்கோர் காற்றை
முதலில் இழுப்பதும் செவ்வாய் வழியே!


மூச்சுக் காற்று உட்புகுந் திடவே
உடலும் உயிருடன் கலந்திட அங்கே
பிரிந்ததை எண்ணி ஒரு புறம் துக்கமும்
வந்ததை எண்ணி மறுபுறம் வருத்தமும்
ஒருங்கே சேர்ந்து உளம் உருகிடவே
ஓங்கிடும் ஒலியினைத் தானே கிளப்பி
உலகோர் உவப்ப ஈன்றவள் மகிழ
முதலில் அழுவதும் செவ்வாய் வழியே!


அழுகையின் இயக்கத்தில் உட்தீ எரிய
தனக்குத் தானே இயக்கம் என்பதை
உளமது உணர்த்த உடலும் வருத்த
முதலில் தோன்றிடும் பசி போக்கிடவே
எங்கே உணவென ஆவலாய்த் தேடி
தாயின் முலையினைப் பற்றியே சிசுவும்
தன் பசி தணித்திட பீறிடும் அமுதை
முதலில் சுவைப்பதும் செவ்வாய் வழியே!


பசியும் பறந்திட பத்தும் பிறந்திட
உடலின் இயக்கம் உணர்வில் கலந்திட
அருகே ஆரென அறியும் ஆவலில்
உடலினை நெளித்து சோம்பல் முறித்து
கண்களை விரித்து கைகளை ஆட்டி
மலர்முகம் காட்டி தாய்முகம் நோக்கி
அவளது அகமும் புறமும் மலரவே
முதலில் சிரிப்பதும் செவ்வாய் வழியே!


வளரும் வயதில் எத்தனை செயினும்
கைகளால் தொட்டு காலினால் உதைத்து
கண்களால் சிரித்து செவிவழி கேட்டு
உண்ண மறுத்து, வாந்தி எடுத்து
இன்னமும் எத்தனை குறும்புகள் செயினும்
அன்னையும் பிறரும் கேட்கத் துடிப்பது
'ம்மா' எனவே ஆசையில் அங்கே
வருமொலி அதுவும் செவ்வாய் வழியே!


அறியும் கல்வியும், புரியும் தமிழும்
சொல்லும் மொழியும், செப்பும் கவியும்
அறிவியல் அறிவும், ஆசைமொழிகளும்,
கூறிடும் காதல் கன்னல் சுவையும்,
விருப்பினைக் காட்ட வெளிவரும் சொல்லும்,
மறுப்பினைக் காட்ட மொழிந்திடும் மொழியும்,
சிரிப்பினைக் காட்ட சிந்திடும் தேனும்,
முதலாய் வருவது செவ்வாய் வழியே!


பிடித்தவர் முகமதை உள்ளில் வாங்கி
அவரை நினைந்தே உள்ளும் உருகி
கண்வழி, மடல்வழி, செவிவழி அதிலே
கனவுத்தூதுகள் கடிதினில் அனுப்பி
கொண்டவர் நெஞ்சில் தானும் புகுந்து
ஆசையில் அவருடன் தனியிடம் சென்று
அன்புடன் அவரிரு கரங்கள் பற்றி
காதலை மொழிவதும் செவ்வாய் வழியே!


இறையின் வடிவினில் மனது லயித்து
முறையாய் தோத்திரம் பாடவே முனைந்து
கரை சேர்த்திட இறை என்றே தெளிந்து
கரையும் சொல்லால் பாடல்கள் படித்து
விரைவாய்த் தினமும் ஆலயம் சென்று
இறையைத் தொழுது அவனை வணங்கி
நிறைவாய்த் தமிழில் பாசுரம் வடித்து
இறையைத் தொழுவதும் செவ்வாய் வழியே!


உழலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
பழகும் தமிழின் பாங்கின் இனிமையும்
வழியும் உணர்வின் ஒவ்வொரு சொல்லும்
திகழும் பெருமையும் வருவது யாவும்
இகழும் நிலையினை தானே அடைவதும்
கழகம் இங்கே ஆட்சியில் இருப்பதும்
தமிழர் அனைவரும் தரணியில் உயர்வதும்
அழகுடன் மொழிந்திடும் செவ்வாய் வழியே!


வாடி அலைந்து, அல்லற் பட்டு,
ஓடிக் களைத்து, இனிவியலாதென்று
வாடி வதங்கி வயோதிகம் வந்து
தேடியதெல்லாம் தனதிலவெனவே
நாடிய ஞானம் நண்ணிடப் பெற்று
கூட்டை விட்டு பிரிந்திடும் வேளை
வாய்வழி பிறந்த மூச்சும் அன்று
வாய்வழி அதுவே சென்றிடும் நேரம்
உறவும் சுற்றமும் ஓவெனவலறி
நால்வர் சுமக்க இடுகளம் வந்து
சிதையில் கிடத்தி செந்தீ மூட்டும்
சமயம் ஆங்கே வந்திடும் போது
அனைவரும் விடைகொட இறுதிக்கடனாய்
அரிசியை இடுவதும் செவ்வாய் வழியே!


செவ்வாய் தொடங்கி செவ்வாய் வழியே
ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்
எவ்வாறெனவே இதுவரை சொன்னேன்!
செவ்வாய் அதனின் சீர்மை உணர்ந்து
செவ்வாய் வழியே நல்மொழி சொல்லி
செவ்வனே செயல்கள் யாவையும் ஆற்றி
செவ்வேள் முருகனைப் பணிவாய் நெஞ்சே!

முருக.கவி said...

செவ்வாய் சிந்திய சீர் மொழி கேட்டோம்!
அவ்வாய் வெல்லும் வகையறிந்து
அவ்வை தந்த அமுதினைப் போல
'செவ்வாய்' தந்ததும் அருமை! அருமை!!

Post a Comment