"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Monday, August 17, 2009

சுற்றுச் சூழல் அவசியம்


முன்னுரை :

சுற்றுச்சூழலைக் காத்திடுவோம்!
சுகமாய் வாழ வழிவகுப்போம்!
வெற்று வார்த்தை இதுவல்ல,
விளையும் நன்மையோ பலப் பல!
- பி.வி.கிரி.

இன்றைய சூழ்நிலையில் எல்லோர் இதயத்திலும் இருக்க வேண்டிய கருத்து இதுவேயாகும்.


சுற்றுச்சூழல் :

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றப் பொருள்களின் தொகுப்பே சுற்றுச்சூழலாகும். பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நன்மைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து பார்த்தால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே விஞ்சி நிற்கின்றன.


அன்றைய நிலை :

பண்டைக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நிறைந்த முழுமையான மெய்யுணர்வினைப் பெற்றிருந்தான். அவனிடம் தொலைநோக்குப் பார்வை, தன்னலமற்றத் தன்மை நிறைந்து காணப்பட்டது. அதன் விளைவாய் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ்ந்து காட்டினான்.

இன்றைய நிலை :

மெய்ஞானம் ஒடுங்கி விஞ்ஞானம் தலைதூக்கியது. கேள்விகளே அறிவின் விழிப்புநிலை என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைதி போயிற்று. வெற்று ஆரவாரங்கள் தலை தூக்கின. பொதுநல நோக்கற்ற தொலைநோக்குப் பார்வையற்ற சுயநலச் சமுதாயம் வேரூன்றியது. விளைவு?...... இவ்வாறு விளைந்ததுதான் இருபதாம் நூற்றாண்டு.

நிகழவேண்டிய மாற்றம் :

இன்றைய சூழ்நிலையை நான் சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. நாம் வசிக்கும் இந்த உலகை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐம்பெரும் பூதங்களுக்கும் கேடு விளையாவண்ணம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும். மனித இனத்தின் அறிவின் முதிர்ச்சியால் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், இயற்கையின் செல்வமாகிய காடுகள், ஆறுகள், அருவிகள், மலைகள் இவையாவற்றின் நலன் குறையலாமோ?

நாம் இயற்கையைப் பாதுகாத்தால், நம்மையும் இயற்கை பாதுகாக்கும். தூய்மை, ஒழுக்கம், நேர்மை, வாய்மை, அடக்கம் நிறைந்த மனித சமுதாயம் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். நலம் யாவும் வழங்கும் நல்லதொரு சூழ்நிலை உருவாக்கவேண்டும்.

முடிவுரை :

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு”
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க நல்லதொரு சூழலை உருவாக்க எண்ணித் துணியுங்கள்! வெற்றி நிச்சயம்!!


குறிப்பு :
ஏர்டெல் நிறுவனம், ஈரோடு காஸ்மாஸ் ரோட்டரி சங்கம், அலோஹா மற்றும் போம்சி பிஸ்கட் இணைந்து நடத்திய மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை.

No comments:

Post a Comment