"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Wednesday, September 9, 2009

தமிழுணர்வு!


தமிழப் பேச முடியல
தமிழப் பேச முடியல
தமிழ்நாட்டுல பிறந்திருந்தும்
தமிழ்மொழிய படிச்சிருந்தும்
தமிழப் பேச முடியல.
பன்மொழிய படிச்சவருதான் பாரதியாரு
பாரினிலே தமிழப் பத்தி என்ன சொன்னாரு
யாமறிந்த மொழிகளிலே இனிமையினாரு
தேமதுர தமிழோசை பரப்பனுன்னாரு
தமிழ்நாட்டுல பன்துறையில தமிழும் இருக்குது
தமிழிருக்க பிறமொழிதான் ஆட்சி செய்யுது
தமிழருன்னா தமிழை முதலில் கத்துக்கவேணும்
தமிழ் படிச்சு பன்மொழியும் தெரிஞ்சுக்கவேணும்
உலகமெங்கும் தமிழறிவை வளர்த்திடவேணும்
உள்ளபடி தமிழுணர்வே ஆட்சி செய்யோணும்!

Saturday, September 5, 2009

“ஆசிரியர் தின வாழ்த்து”

ஆயிரம் ஆயிரம் மழலையர்க்கு அன்பினை வழங்கும் அட்சயப் பாத்திரங்கள்!
அறியாமை இருள் போக்கி அறிவின் சுடரேற்றும் அணையா தீபங்கள்!
ஓயாமல் உழைத்துழைத்து உன்னத சமுதாயம் தரும் உயர்ந்த உள்ளங்கள்!
மெழுகெனவே தானுருகி பிறர்க்கு ஒளி தரும் தியாக தீபங்கள்!
அறிவு பசி தீர அறிவினைக் கேட்டவருக்கு கேட்டவண்ணம் தரும் கற்பக விருக்ஷங்கள்!
மழலையர் என்ற நிலையினின்றும் மாணவர் என்ற நிலைக்கு உயர்த்தும் ஏணிப் படிகள்!
மாணவரின் ஆக்க நிலை உயர்த்த வாய்த்த முன்மாதிரிகள்!

சக்தியுள்ள சமுதாயம் படைப்பதனால் இவர்கள் பிரம்ம சக்தி!
நற்குணங்களை என்றும் காப்பதனால் இவர்கள் விஷ்ணு சக்தி!
தீய சக்திகளை அழிக்கும் மாணவம் படைப்பதனால் இவர்கள் சிவசக்தி!
அனைத்துமாகி விளங்கும் எங்கள் ஆசான்களே பரம்பொருளின் சக்தி!
அன்பின் வழி வந்து அறிவின் சுடர் தந்து அறம் பல தழைக்கச் செய்யும்
ஆசான்கள் தாள் போற்றுவோம்! அடிமலர் பணிந்தேத்துவோம்!
அறிவின் ஒளியேற்றுவோம்! நாமே!!

Friday, September 4, 2009

தம்பிப் பாட்டு


சின்ன சின்ன தம்பிகளே
கொஞ்சம் நில்லுங்க! இந்த
அன்னை சொல்லும் சொல்லைக்
கொஞ்சம் காதில் வாங்குங்க!

எண்ணம் தன்னை உயர்வாய்
வைக்க வேணுங்க! அட
எண்ணம் போல வாழ்வென்பதை
நினைவில் கொள்ளுங்க!

உடலைத் தந்து உயிராய்
நம்மை வளர்த்தது யாருங்க?
உயர்வையே நாடும் உத்தமர்
நம் பெற்றோர் தானுங்க!

கல்விக் கண்ணைத் திறந்து
வைத்த கடவுள் யாருங்க?
கடமையே தம் பெரிதாய்
கொண்ட ஆசான் தானுங்க!

மாதா பிதா குரு தெய்வம்
மனதில் கொள்ளுங்க! நீங்க
மாறாத அன்போடு எல்லோரையும்
மரியாதை செய்யுங்க!

சத்துள்ள உணவினை மட்டும்
எப்போதும் உண்ணுங்க!
அளவாய் உண்டு வளமாய் வாழக்
கற்றுக் கொள்ளுங்க!

உணவு தந்த எல்லோருக்கும்
நன்றி சொல்லுங்க! நித்தம்
உணவு எல்லோருக்கும் கிடைக்க
வேண்டுமென்று எண்ணிக் கொள்ளுங்க!


ஒழுக்கம் தன்னை உயிராக
மதிக்க வேணுங்க! நீங்க
உடலாலும் மனதாலும் என்றும்
உண்மையாய் இருங்க!

சொன்ன சொல்லை சொன்ன
வண்ணம் காக்க வேணுங்க!
ஒரு சொல்லு, ஒரு வாக்காய்
இருக்கப் பழகுங்க!

நல்லது மட்டும் எப்பொழுதும்
பழகிக் கொள்ளுங்க! நீங்க
நல்லது அல்லாததை அப்படியே
விட்டு விடுங்க!

கல்விக் கூடம் என்பதொரு
கலைக் கூடங்க! அதில்
உங்களை நீங்களே உருவாகிக்க
கற்றுக் கொள்ளுங்க!

கடின உழைப்பும் விடாமுயற்சியும்
கண்களைப் போலங்க! அதனை
கைக் கொண்டு எல்லோரும்
முன்னுக்கு வாருங்க!

சொன்ன கருத்து அத்தனையும்
உளியைப் போலங்க! அந்த
உளியை எடுத்து உங்களை
நீங்களே செதுக்கிக் கொள்ளுங்க!



உன்னை நீயே உருவாக்கு! உன்னத சமுதாயத்தின் கருவாகு!

தாய் தந்தையரின் தயையினால் உடல் உருவாவதும் உயிர் திருவாவதும் இயற்கை தந்த வரம். இப்பெரும் வரத்தினால் பிறந்தோம், பிற சூழ்நிலைகளின் அரவணைப்பில் வளர்ந்தோம். ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்றிராமல் நாம் எதையாவது செய்துவிட்டுப் போகலாமே!

எதையாவது செய்வதென்றால் யோசித்துப் பாருங்கள்! இவ்வுலகில் புதிதாக எதையேனும் செய்யவியலுமா? நாம் செயல் செய்ய எவ்வாறு கற்றோம்? எவரையேனும் பார்த்து, செயல் புரிவதைப் பார்த்து அதைப் போலச் செய்யக் கற்றோம்.

குழந்தைப் பருவத்திலிருந்து வளர வளர நாம் பார்க்கும், பார்த்த சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் இவற்றால் நம்மையும் அறியாமல் அனைத்தையும் கற்றுக் கொள்கிறோம். நாம் பார்த்திராத, இதுவரைக் கேட்டிராத செய்திகளைப் பற்றி நாம் அறியமாட்டோம். முற்றிலும் புதிதான ஒரு செய்தி என்றால் நிச்சயம் நாம் யோசிப்போம்!

சிந்தித்துப் பாருங்கள்! இந்த உலகம் ஒன்றுதான். இதில் அவரவர் பிறக்கக்கூடிய இடம், காலம், வசதிகள், இயற்கை அமைவு, சூழ்நிலை போன்றவற்றின் தூண்டுதலுக்கு ஏற்ப எண்ணங்கள் மற்றும் செயல்கள் அமைகின்றன.

இவ்வேறுபாட்டினால் பல்வேறு வகையான மனிதர்கள் உருவாகின்றனர். உண்மையில் சொல்லப் போனால் உலகம் உன்னை உருவாக்குவதில்லை. உனக்கேற்ற உலகத்தினை நீயே உருவாக்குகின்றாய்!

சிலரால் இதை ஏற்கமுடியாது. அவர்கள் தனக்கு ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தன்னையன்றி பிறரைக் காரணமாக்கக் கூடிய மனப்பான்மை உள்ளவர்கள். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமே பொறுப்பல்லவா? “நன்மையும் தீமையும் பிறர் தர வாரா” என்பது முதுமொழி அல்லவா! அதுவே அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மையுமாகும்.

யோசித்துப் பாருங்கள்! நம்மை நாம் உருவாக்குகிறோமா இல்லை சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் நம்மை உருவாக்குகின்றனவா? மேலோட்டமாகப் பார்த்தால் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் தான் நம்மை உருவாக்குவதாகத் தோன்றும். இல்லவே இல்லை, ஒரு விழிப்புணர்வோடு ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள்! நம்மை நாம் தான் உருவாக்குகிறோம். “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பது வள்ளுவன் வாக்கு.

இவ்வுலகில் நமக்கு உடல், உயிர் தந்து உயர்வான அனைத்து உணர்வுகளும் தரப்பட்டுள்ளன. நாம் ஒரு காலிப் பையினைப் போல இலேசாக இருக்கிறோம். நாம் எதனை விரும்புகிறோமோ அதனை எடுத்து நம்முள் திணித்துக் கொள்கிறோம். நம்மை நாமே இத்தகையவன் என அடையாளம் காட்டுகிறோம். நம்மை விமர்சிப்பது நமது மனமே. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் செயலாற்றுவோம்.

என் எண்ணத்தில் நான் நல்லவன் என ஊறிப் போகிறது என வைத்துக்கொள்ளுங்கள்! என் மனம் என்ன சிந்திக்கும்? எதனைச் செய்தால் நல்லவன் எனப்படுவோம், நல்லவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென நான் நினைக்கிறேனோ அதனைப் போலவே நான் செயலாற்றுவேன். ஏனென்றால் என்னை நான் நல்லவன் என அடையாளம் காட்ட விரும்புகிறேன்.

அதனைப் போல தான் நல்ல உணர்வுகளையும் எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டு உன்னை நீயே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

“நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகின்றாய்! நீ அதுவாகு!” என்பது வேதத்தின் சாரமன்றோ?

உன்னை நீ உணர்ந்த நொடியிலேயே திருத்திக் கொள். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு முன்னேறப் பார். பிறர் நம்மை எப்படி நடத்தவேண்டுமென நாம் உணர்கிறோமோ அப்படியே நாம் பிறரை நடத்தவேண்டும்.

கொடுத்துப் பெறுவது மரியாதை மட்டுமல்ல, மனமகிழ்வையும் தான். இது வரை உலகில் நீ உணர்ந்த அனுபவ அறிவு உனக்குள்ளே பல பதிவுகளாக உள்ளன. இன்னும் சிறப்பாக இப்பிறவியைக் கடக்க உள்ளுணர்வின் உந்துதலோடு உன்னை நீயே உருவாக்கு! நன்மையும் தீமையும், வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைதான். நம் மனத்தின் போக்கினைக் கட்டுப்படுத்தப் பழகிவிட்டால் எல்லாமே நமக்கு இனிமையானதாகி விடும். நீ உன்னை உணர்ந்து உன் வசமாகி விட்டால் உலகம் நொடியில் உன் வசமாகி விடும். எனவே உன்னை நீயே உருவாக்கு! உன்னத சமுதாயத்தின் கருவாகு!!

Tuesday, September 1, 2009

இறைவணக்கம்!

சத்யம் சத்யம் இறைநிலையே!
சாத்யம் இருக்கு அனுக்கிரஹியே!
உன்னால் முடியும் முடியுமென்றே
உன்திருப் பாதம் சரணடைந்தேன்!

என்றும் எங்கும் திருவருளே!
நின்று பொழியும் கார்முகிலே!
இன்றும் என்றும் உனதருளே
வேண்டி நிற்கிறோம் உண்மையிலே!

நன்மை பலவும் பெருகிடவே
நாடியே அருளும் நல்லதுவே!
இம்மையும் மறுமையும் சிறந்திடவே
இனிதே அருள்வாய் கண்மணியே!

மெய்மை மென்மை மேன்மையென
உய்யும் பொருளில் உறைவதுவே!
மேன்மை மேன்மை மேன்மையதை
மேலும் மேலும் தருவதுவே!

கல்விப் பயிலும் கண்மணிகள்
கருத்துடன் பயில அருள்புரிவாய்!
செல்வம் யாவும் சேர்ந்துநிதம்
சிறப்பாய் வாழச் செய்திடுவாய்!

ஆற்றல் மிக்க வீரனென
அடியேனையும் நீ ஆக்கிடுவாய்!
தோற்றப் பொலிவுடன் என்னையும்நீ
துலங்கிட செய்தே துணைபுரிவாய்!

அன்பும் அருளும் ஒருங்கிணைந்தே
அடியேன் கைவர அருள்செய்வாய்!
பணிவும் துணிவும் சேர்ந்தினிதே

அணிசெய்திட நீ மனம்மகிழ்வாய்!