"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Thursday, August 2, 2012

கல்வியின் சிறப்பு


தன்னை நம்பிய நபர்களைக் கண்ணிமைப் போல் காக்கும்,
கன்னலென இனிக்கும், கனியெனவே சுவைக்கும்,
அன்னையைப் போல் அரவணைக்கும், அன்றிலெனவே உடனிருக்கும்,
வென்றிடவே துணை நிற்கும், வெண்ணிலவாய்க் குளிர்விக்கும்,
தன்னுள் இருக்கும் திறமைகளைத் தனித்தனியாய் வகைப்படுத்தும்
உள்ளுணர்வாய் உடன் நிற்கும், உயர்ந்தோங்க வழிவகுக்கும்
சிறப்புகள் யாவையும் தேடித்தரும் சிறப்பே!
நீ என்ன மொழியா?
            அறிவா?
            அழகா? 
            அமைதியா?
            ஆனந்தமா?
அனைத்தையும் உன்னுள் அடக்கிய நீ யார்?
உன்னை என்னால் உணர முடிகின்றது
நன்றாக என்னால் அறிய முடிகின்றது.

என்னை எனக்குக் காட்டிக் கொடுத்ததே நீதானே!
உன்னால் தான் என்னை நான் இவ்வுலகிற்குக் காட்டினேன்!
காட்டிக் கொடுப்பது குற்றமாமே!  இது குற்றமா?
இல்லவே இல்லை!
களங்கத்தை ஏற்படுத்தினால் குற்றம்!
அறியாமையை வளர்த்தால் குற்றம்!
நீயோ, களங்கத்தைப் போக்கினாய்!
அறியாமையை நீக்கினாய்!
ஒழுக்கத்தை உள்விதைத்து ஒழுங்கற்ற வடிவம் தந்தாய்!
என்னை நானே வடித்தெடுக்க ஏற்றதோர் உளியுமானாய்!
அறங்கள் எனும் வரங்களாலே வார்த்தெடுத்தேன் என்னையும் நான்!
ஸ்வரங்களென உள்ளிருந்து சுகராகம் மீட்டுகின்றாய்!
ஆத்ம சுகம் கண்டு கொண்டேன்
அழியா வரம் பெற்று விட்டேன்
சூட்சமத்தை உணர்ந்து கொண்டேன், சுடர் உலகே! விழி மலர்க!
எல்லையில்லா வானம் போல் எல்லையில்லாதது கல்வி!
கல்வி இல்லாதோர் எவரும் இல்லையென சொல்லும் வண்ணம் கல்!
கற்க கசடு அற!!
கல்வி அமுதை உண்டு விடு!
அழியா வடிவைப் பெற்று விடு!
வாழ்க! அறிவுச் சுடர்!
வெல்க! அறிவுத் தீவிழி!
அறிவுத் தீவிழியே! அழித்துவிடு அறிவிலியை!
அறிவுச் சுடர் ஒளியே! வளர்த்து விடு வாழ்வியலை!