"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Friday, March 20, 2009

சூரியனே !




சூரியனே !
சுட்டெரிக்கும் சுயம் நீ, சுதந்திர வெளிச்சம் நீ
ஆதிமுதல் அந்தம்வரை அத்தனைக்கும் காரணி நீ
அவதார புருஷர்களும் அடிபணியும் மூலமும் நீ
இயற்கையே ஆசான் என இயம்புகின்றார் பலரும்,
அவ்வியற்கையைப் படைத்தவன் நீ !
எவ்வுயிர்க்கும் காவலன் நீ !
பகலவனாய் நீ இருப்பதால் பகலிரவை யாமறிந்தோம்
பகட்டில்லாப் பரிதியும் நீ, பயன் கருதா பணியாளன் நீ
விருப்பு வெறுப்பின்றி வினையாற்றும் தூயோன் நீ
மொழியில்லா இலக்கியம் நீ ; மொழியாத கீதையும் நீ !
ஓயாத உழைப்பாளி, ஒளியான வழிகாட்டி
பேரண்டத்துள் உனக்கென ஓரண்டம் சமைத்தவன் நீ
தன்னேரில்லா தலைவன் நீ !
தன்மையிலோ ரோசக்காரன் !
ரோசமூட்ட கேட்பதுவோ சூடு இருக்கிறதா ? என்பதுதானே
உன்னத உக்கிரம் நீ !
உண்மையும் நீ, உயிரும் நீ, அறிவும் நீ, ஆற்றலும் நீ !
அகில உலகம் பெற்றிருக்கும் ஆகர்ஷன சக்தியும் நீ !
சாதனைகள் உனக்குச் சாதாரணம்
உழைப்புக்கு நீயே உதாரணம், - ஆம்
சுட்டெரிக்கும் சுயம் நீ ! சுதந்திர வெளிச்சம் நீ !!

2 comments:

குடந்தை அன்புமணி said...

வலையுலகிற்கு புதிதாக வருகை தந்திருக்கும் தங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்! நிறைய எழுதுங்கள். நன்றாக இருக்கிறது, சூரியனும் அதன் சுயமும்... வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள்! கருத்துரையிட வசதியாக இருக்கும்.

Post a Comment